தண்ணீர் வாளியில் தலைகுப்புற விழுந்த 2வயது சிறுவன் பலி
சென்னை: தண்டையார் பேட்டையில், பெற்றோரின் அஜாக்கிரதையால் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சுத் திணறி பலியானான்.
சென்னை தண்டையார்பேட்டை, வினோபா நகர், 9-வது தெருவை சேர்ந்த ஹக்கீம், வீட்டில் இருந்தபடியே பை தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும், ரம்ஜான்பீவி (5) என்ற மகளும், இப்ராகிம் (2) மற்றும் 7 மாதத்தில் ஆண் குழந்தை என 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று, அதே பகுதியில் உள்ள பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் ரம்ஜான் பீவியை அழைக்க வர பாத்திமா சென்றிருந்த நேரத்தில், வீட்டில் விளையாடி கொண்டிருந்திருக்கிறான் சிறுவன் இப்ராகிம். 7 மாத கைக்குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருக்க, ஹக்கீம் தனது வேலையில் பிசியாக இருந்துள்ளார்.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளியலறை பக்கம் சென்றதை ஹக்கீம் கவனிக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு இப்ராகிமின் சத்தையையே காணவில்லையே என சந்தேகித்த ஹக்கீம், சிறுவனைத் தேடியுள்ளார். குளியலறைக் கதவைத் திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி, அங்கே, ஒன்றரை அடி உயர வாளியில் தலைகுப்புற விழுந்தவண்ணம் இப்ராகிம் இருப்பதைக் கண்டு பதறிப் போயுள்ளார் ஹக்கீம்.
உடனடியாக சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு சிறுவனது பெற்றோர் கதறி அழுதனர்.
விளையாடுவதற்காக குளியலறைக்குள் சென்ற இப்ராகிம் தவறுதலாக வாளி நீருக்குள் விழுந்துள்ளான். சிறுவனாகையால் வெளிவரத் தெரியாமல் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகியுள்ளான்.
சிறு குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர் எப்போதும் விழிப்புணர்வுடன் அவர்களைக் கண்காணித்த வண்ணம் இருக்க வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.