சென்னைக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் குவிந்த 200 டன் நிவாரணப்பொருட்கள்
சென்னை: நேரு உள்விளையாட்டரங்கத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 200 டன் நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்தன. இங்கிருந்து பொருட்களை விநியோகிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பொருகளை வழங்கி வருகின்றன. இதனை தமிழக அரசு நேரு உள்விளையாட்டரங்கில் சேமித்து மாநகாட்சி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு விநியோகம் செய்து வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி துணை ஆணையர் கந்தசாமி கூறியதாவது:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நேற்று மட்டும் சுமார் 200 டன் பொருட்கள் நேரு உள்விளையாட்டரங்கத்துக்கு வந்தது. அவற்றில் ஒரு குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒரு பையில் அடைத்து நுங்கம்பாக்கம்,கோடம்பாக்கம்,சைதாபேட்டை,அம்பத்தூர், அயனாவரம், வில்லிவாக்கம்,சேனை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பைகளில் அடைக்கப்படும் உடைகள்
உணவு, அத்தியாவசிய பொருட்கள் தவிர ஆண்,பெண் குழந்தைகளுக்கான ஆடைகள், உள்ளாடைகள், போர்வைகள், கம்பளிகள், நேப்கின்கள் உள்ளிட்ட பொருட்கள் ஒரு பையில் அடைக்கப்படுகின்றன.

சமூக வலைதளங்கள்
ஆரம்ப நாட்களில் தன்னார்வலர்கள் பற்றாக்குறையால் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் குவிந்தனர்.

கல்லூரி மாணவர்கள்
பொருட்களைப் பிரித்து பைகளில் கட்டும் பணியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டுள்ளனர். பிஸ்கட், பால் பவுடர்,தண்ணீர், துணிகள், நூடுல்ஸ், குளிர் பானங்கள் உள்ளிட்டவற்றை தனித்தநியாக பிரித்து பைகளில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி மாணவர்கள்
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை பார்த்து இங்கு வந்ததாக பள்ளி மாணவர்கள் கூறினர். மேலும் விடுமுறை தொடர்ந்தால் இந்த பணியை செம்மையாக செய்வோம் என்றனர்.

குடிநீர், மதிய உணவு
பொருட்களை பிரித்து பைகளில் அடைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு குடிநீர், மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டும்...
இந்த பொருட்கள் தற்போது நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிற இடங்களுக்கும் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications