விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்... இந்து அமைப்புகளுக்கு போலீஸ் 23 நிபந்தனைகள்!
சென்னை: சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த இந்து அமைப்புகளுக்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது மாநகர காவல் துறை.
விநாயகர் சதுர்த்தி வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தி என்பது, பக்தியைத் தாண்டி, ஒரு விவகாரமாகிவிட்டது.
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்து, பல்வேறு பூஜைகளை நடத்திய பின்னர் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகரில் நடந்து வருகின்றன.

தொன்னூறுகளின் இறுதியில்தான் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பித்தன. அதற்கு முன் இப்படிப்பட்ட ஊர்வலங்கள் கிடையாது.
இந்த ஆண்டு பிரச்சினை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இந்து அமைப்புகளுடன் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை செய்யும் கூட்டம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை நடந்தது.
இந்த கூட்டத்தில், இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி, சிவசேனா, விசுவ இந்து பரிஷத், அனுமன் சேனா உள்பட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டதில் தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர்கள் சி.ஸ்ரீதர், ஆர்.திருஞானம், கே.சங்கர், கே.சண்முகவேல் ஆகியோர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு குறித்து நிபந்தனைகளை கூறினர்.
அந்த நிபந்தனைகளில் சில:
*சென்னை மாநகரில் கடந்த ஆண்டு 1862 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஆண்டு புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது.
* 3 முதல் 14 அடி வரை மட்டும் சிலை செய்யவேண்டும். அந்த சிலை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலும், மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனம் பிறப்பித்துள்ள நிபந்தனைகளின் அடிப்படையிலும், களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* சிலையில் அடிக்கப்படும் வண்ணத்தில், ரசாயன கலவை இருக்கக்கூடாது.
* சிலைகள் வைக்கப்படும் இடத்தை சுற்றி நல்ல வெளிச்சம் இருக்கவேண்டும்.
* அடையாளம் தெரியாத வாகனங்கள் அருகே நிறுத்தக்கூடாது.
* ஒரு சிலைக்கு ஒரு போலீஸ்காரர் என்று பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், சிலையை பாதுகாக்க 5 பேர் கொண்ட குழுவை விநாயகர் சிலை வைக்கும் இந்து அமைப்பு உருவாக்க வேண்டும். இந்த குழுவை சேர்ந்தவர்கள், போலீஸ்காரருடன் இணைந்து சிலையை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும்.
* சிலை ஊர்வலம், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்ல வேண்டும்.
* ஊர்வலத்தின்போது, கலர் சாயப்பொடி தூவவோ, கலர் சாயப்பொடி கலந்த தண்ணீரை பீச்சி அடிக்கவோ கூடாது.
* மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கோஷங்களை எழுப்பக்கூடாது.
* கடலில் 500 மீட்டர் தூரத்துக்குள் சிலையை கரைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications