கீழக்கரையில் ரூ. 25 லட்சம் கஞ்சா பறிமுதல் - இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக தகவல்!
கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கடலோர கரையோரங்களில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கீழக்கரை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கியூ பிரிவு துணை சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காஞ்சிரங்குடி பக்கீர் அப்பா தர்கா அருகே கடற்கரையோரம் சிலர் நின்றனர்.
அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 122 பொட்டலங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் ஆகும். மேலும் அங்கு நின்ற கார் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, இலங்கைக்கு கொண்டு செல்ல வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த முகமது பெரோஸ் கான் உள்பட 9 பேரை பிடித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.