சட்டம் தன் கடமையை செய்ய தவறிவிட்டது.. பாஜக தவறாது: எச்.ராஜா பேட்டி
2ஜி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை: 2ஜி வழக்கு குறித்து நேற்று டுவிட்டரில் கிண்டலாக கருத்து தெரிவித்திருந்த ஹெச்.ராஜா இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2ஜி ஊழல் வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்புடையது அல்ல என பகிரங்கமாகவே தெரிவித்தார். இந்த வழக்கால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, அதனை யாரும் மறுக்க முடியாது.
போதிய ஆதாரங்கள் நீதிமன்றத்தில் வழங்கப்படாதாதல் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். பாஜகவை பொறுத்தவரை கடைசி வரை இந்த வழக்கில் போராடும். நாட்டிற்கு இழப்பு ஏற்படுத்தி தந்த குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும், அதற்காக பாஜக போராடும். விரைவில் மத்திய அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்படும், அப்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கண்டிப்பாக கிடைக்கும்.
இந்த வழக்கு போடப்பட்டது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போதுதான், கனிமொழி, ராஜா சிறைக்கு சென்றது மன்மோகன் சிங் ஆட்சியில்தான், இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் மேல்முறையீடு பழிவாங்கும் நடவடிக்கையல்ல, நியாயமான நடவடிக்கை என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.