ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு- 3,000 மீனவர்கள் வேலை நிறுத்தம்! மீன்பிடி துறைமுகங்கள் 'வெறிச்'!!
ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து 3,000 மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்கள் வெறிச்சோடின.
ராமேஸ்வரம்: தமிழர் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சிக்கு ஆதரவு தெரிவித்து 3,000 மீனவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமிழகம் தழுவி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் அலை அலையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
அனைத்து தரப்பினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் போராடி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு நேரில் சென்றும் ஆதரவு தெரிவித்தனர்.
இன்று தமிழகத்தின் பல இடங்களில் மழை கொட்டியபோதும் அதை பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்கான புரட்சி தொடர்ந்து வருகிறது. ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் 3,000 மீனவர்கள் பங்கேற்றனர். ராமேஸ்வரம் கடற்கரையில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீன்பிடி தொழிலை சார்ந்தோரும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடியுள்ளன.