ஆபரேசன் ஸ்மைல்: திருச்செந்தூரில் கடத்தப்பட்ட 3 குழந்தைகள் மீட்பு - 6 பேர் கைது
தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடத்தப்பட்ட இரண்டு குழந்தைகளை நெல்லையில் போலீசார் மீட்டுள்ளனர். குழந்தைகளை கடத்திய ஒரு பெண் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடத்தப்பட்ட அஸ்வினி, சரண் ஆகியோரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி பாலசுபா. இவர்களது மகன் சரண் (வயது 4).
கடந்த டிசம்பர் மாதம் 30ஆம்தேதி ராஜதுரை அவரது மனைவி மற்றும் மகன் சரணுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். 31ஆம் தேதி கோவில் வளாகத்தில் விளையாடி கொண்டிருந்த சரண் திடீரென மாயமானான். அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சரணை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி காட்டூரை சேர்ந்த இளங்கோவன் அவரது மனைவி சுதா, மகள் அஸ்வினி (3) ஆகியோருடன் கடந்த 3ஆம்தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து விட்டு இரவு அங்குள்ள கல் மண்டபத்தில் அனைவரும் தூங்கினர்.
மறுநாள் காலையில் பார்த்த போது குழந்தை அஸ்வினியை காணவில்லை. அவளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அஸ்வினியை தேடி வந்தனர். மாயமான சரண் பற்றி எந்தவித துப்பும் கிடைக்காத நிலையில் அஸ்வினி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தைகளை கண்டுபிடித்து தரக்கோரி சரண் மற்றும் அஸ்வினியின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தனர். எஸ்.பி. உத்தரவையடுத்து குழந்தைகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் குழந்தைகள் எங்கு சென்றனர், யாராவது அவர்களை கடத்தி சென்றார்களா?என்று விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண் 2 குழந்தைகளையும் கடத்தியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை நெல்லை மாவட்டம் சேர்ந்தமரத்தில் வைத்து போலீசார் கைது செய்து 2 குழந்தைகளையும் மீட்டனர். கைதான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சிவகாசி ஆனையூரை சேர்ந்த கணபதி மகள் மனிஷா(7) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி திருச்செந்தூர் கோவிலில் வைத்து மாயமானாள். அந்த குழந்தையையும் போலீசார் தேடி வருகின்றனர்.
காணமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க மாவட்ட காவல் துறை நிர்வாகம் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு 'ஆபரேசன் ஸ்மைல்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாயமாகும் குழந்தைகள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
கோவிலில் கடத்தப்படும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் குழந்தைகள் இல்லாத பெற்றோர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. திருடப்படும் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்குவது சட்டப்படி குற்றம் என்றும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திர நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.