3 கரடிங்க.. ராத்திரி நேரமுங்க.. முடியலைங்க.. புலம்புகிறார் கோத்தகிரி ஜெகதீஷ்
பேக்கரிக்குள் 3 கரடிகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
கோத்தகிரி: ஜெகதீஷ் பேக்கரி கடை மீது அந்த 3 கரடிகளுக்கும் அப்படி ஒரு ஆசை!
கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி என்ற இடம் உள்ளது. இங்கு ஜெகதீஷ் என்பவர் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த மாதம் 30-ந் தேதி நள்ளிரவில் அந்த பேக்கரிக்குள் கரடி ஒன்று புகுந்து விட்டது. பின்னர் கண்ணாடி அலமாரியில் விற்பனை பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட எண்ணிய கரடி கண்ணாடி அலமாரிகளை உடைத்து தூள் தூளாக்கியது. இதையடுத்து சாவகாசமாக கேக், பிஸ்கட், வர்க்கி போன்றவற்றை சாப்பிட்டு கிளம்பி விட்டது.
கரடி நடமாட்டம்
மறுநாள் காலை ஜெகதீஷ் வந்து பார்த்தால் கடையே அலங்கோலமாக கிடந்தது. இதனால் திரும்பவும் அந்த கரடி வந்துடக்கூடாது என்பதற்காக வனத்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்படி வனத்துறை ஊழியர்கள் அங்கு காவலுக்கு பணியமர்த்தப்பட்டனர். காவலுக்கு ஆள் வைத்ததிலிருந்து அந்த கரடி வரவே இல்லை. அதனால் கரடி நடமாட்டம் இல்லை என நினைத்து கொண்டு ஊழியர்கள் கண்காணிப்பு பணியை நிறுத்தி விட்டனர்.
பட்டாசு வெடித்தனர்
ஆட்கள் அங்கு இல்லை என தெரிந்து கொண்ட மறுநாளே திரும்பவும் கரடி வந்துவிட்டது. இப்போது கூடவே மேலும் 2 கரடிகளை அழைத்து கொண்டு வந்தது. அதே பேக்கரிக்குள் நுழைந்தது! வழக்கமான அட்டகாசத்தில் இறங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். இந்த சத்தத்தை கேட்டதும் கரடிகள் தெறித்து ஓடிவிட்டன.
3 கரடிகள்
பயந்து ஓடிய கரடிகள் மீண்டும் வராது என்று பார்த்தால், நேற்று முன்தினமும் வந்துவிட்டது. இப்பவும் அதே பேக்கரிதான்!! ஆனால் அன்றைய தினம் பார்த்து, கடையில் வேலை நடப்பதால் ஜெகதீஷ், மற்றும் ஒரு ஊழியர் அங்கேயே தூங்கி கொண்டிருந்தனர். பொருட்களை உருட்டும் சத்தம் கேட்டு விழித்து பார்த்தால் அதே 3 கரடிகள் தங்கள் முன்னே அசையாமல் இவர்களை உற்று பார்த்துக் கொண்டு நின்றன.
தீப்பந்தம்
உடனே அலறியடியத்து கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள் இருவரும். கத்தி கூச்சல் போடவே, வனத்துறையினர் விரைந்து வந்தனர். இந்தமுறை பட்டாசு இல்லை.. தீப்பந்தத்தை தூக்கிகொண்டு வந்தனர். அந்த நெருப்பை பார்த்ததும் கரடிகள் ஓடிவிட்டன.
கூண்டு வைத்து வேண்டும்
இந்த 3 கரடிகளால், பாவம் ஜெகதீஷ் ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார். நிம்மதியாக இரவில் தூங்க முடியாமல், கடையிலும் நஷ்டம் ஏற்படுவதாக புலம்புகிறார். இந்த கரடிகளை கூண்டு வைத்து பிடித்தால்தான் சரிப்படும் என்பதால் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்!