சென்னை குண்டுவெடிப்பில் காயமடைந்த 14 பேரில் 3 பேருக்கு செவித்திறன் பாதிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காயமடைந்த 14 பேரில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்ட நிலையில் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களில் 3 பேருக்கு காதில் செவித்திறன் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற இளம் பெண் உயிரிழந்தார். 14 பேர் காயமடைந்தனர்.
இதில் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மற்ற 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடித்த போது ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த 3 பேருக்கு பலத்த காயங்களுடன் செவித்திறனும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததில் இவர்கள் 3 பேரும் காது கேட்கும் திறனை இழந்துள்ளனர். தற்போது அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ள 6 பேரின் கால்களிலும் பால்ரஸ் குண்டுகள் பாய்ந்துள்ளன. சில குண்டுகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர். இருப்பினும் சிலருக்கு சில குண்டுகள் சதைகளுக்குள் புதைந்து போய் விட்டன.
இதை எடுக்க முடியாது. அதேசமயம் இவை இருப்பதால் ஆபத்து இல்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.