தேர்தலில் நன்றாக செலவு செய்து விட்டு... கணக்குக் காட்டாத கணவான்கள்...!
சென்னை: ஆயிரத்தில் நான் ஒருவன்... இப்படி நிறையப் பேர் ஜாலியாக அல்ல.. சோகமாக பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.. ஏனாம்.... இவர்கள் எல்லாம் கடந்த தேர்தல்களில் நிறைய அல்லது குறைவாக செலவு செய்து விட்டு அந்தக் கணக்கைக் காட்டாமல் விட்டதால் தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தடை செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்களால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் அடடா வடை போச்சே என்ற ரேஞ்சுக்கு சோக கீதம் பாடி வருகின்றனர்.
தமிழகத்திலும் இப்படிப்பட்ட பிரகஸ்பதிகள் நிறையப் பேர் உள்ளனர்.
செலவு செஞ்சா கணக்கு காட்டனும் பாஸு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை ஒரு பைசா கூட விடாமல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது விதி.
அட போங்கப்பா.. கணக்கு காட்டிட்டு
ஆனால் தேர்தலில் போட்டியிடுவதோடு சரி, கணக்கு வழக்கெல்லாம் காட்டுவதே கிடையாது.
பெரிய தலைகள் மட்டும்...
பெரிய கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தவறாமல் கணக்குக் காட்டுவார்கள். சுயேச்சைகள் பெரும்பாலும் கணக்குக் காட்டுவதே இல்லை.
நாடு முழுவதும் 3275 பேர்
இப்படி நாடு முழுவதும் கணக்குக் காட்டாத வேட்பாளர்களின் எண்ணிக்கை 3275 ஆகும்.
போட்டியிட முடியாமப் போச்சே
இ்வர்களுக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. எனவே இவர்களால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது.
தமிழ்நாட்டுக்காரவுக 460 பேர்
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டும் 460 ஆகும்.
உ.பி.தான் பர்ஸ்ட்..
இந்த பட்டியலில் உ.பி மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. அங்கு மட்டும் 1109 பேர் கணக்குக் காட்டாமல் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
2வது இடம் பீகாருக்கு
நிதீஷ் குமார் அரசாளும் பீகாருக்கு இதில் 2வது இடம். அங்கு 566 பேர் கணக்குக் காட்டவி்ல்லை.
தேர்தலில் போட்டியிடுவதை விட கணக்குக் காட்டுவதுதான் மிக முக்கியம்.. இல்லாவிட்டால் அடுத்த முறை போட்டியிட முடியாமல் போய் விடும்...