தமிழகத்தில் கொட்டிய கோடை மழை... மின்னல் தாக்கி 4 பேர் பலி, 8 பேர் படுகாயம்
சென்னை: தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக கோடைமழை கொட்டிவருவதால் அனலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பியுள்ளனர்.
இடியும் மின்னலுமாய் கொட்டிய கோடைமழைக்கு நான்கு பேர் மரணமடைந்துள்ளனர். 8 பேர் உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. அத்துடன் ஆங்காங்கே அனல் காற்றும் சேர்ந்து வீசியதால் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
லட்சத் தீவு மற்றும் கர்நாடக மாநிலம் அருகே நிலவும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி சுட்டெரிக்கும் கோடைக்கு இதமாக கடந்த சில நாட்களாக கோடை மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. நெல்லை, குமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து பூமியை மட்டுமல்லது மக்களையும் குளிர்வித்தது.

குமரியை குளிர்வித்த மழை
நேற்று குமரி மாவட்டத்தின் பெருஞ்சாணி அணைப்பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. மேலும் மலையோர பகுதிகளான குலசேகரம், பொன்மனை, மணலோடை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

திற்பரப்பு அருவியில் தண்ணீர்
மலையோர பகுதியில் பெய்த மழையால், குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் அதிகரித்து வருகிறது.

4பேர் பலி 8 பேர் காயம்
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

கிரிக்கெட் விளையாடிய
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற கூட்டுறவு இணைப்பதிவாளர் மணி. இவரது மகன் விக்னேஷ் (23). இவர், குடியாத்தம் அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தனது நண்பர்கள் குடியாத்தம் அமனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் பாபு (23), உமாபதி மகன் அருண்குமார் (21), குமார் மகன் வேலாயுதம் (28), ரவி மகன் விஜய் (24), மற்றொரு ரவி மகன் கார்த்தி (25) மற்றும் குடியாத்தம் வாரியார் நகரைச் சேர்ந்த விநாயகம் மகன் ஜெகன் (23) ஆகியோருடன் நேற்று காலை கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்.

மின்னல்தாக்கி பலி
பகல் 1.30 மணிக்கு வானம் இருண்டு திடீரென இடி, மின்னலு டன் மழை பெய்யத் தொடங்கியது. மரத்தின் அடியில் ஒதுங்கியபோது மின்னல் தாக்கியதில் 7 பேரும் மயங்கி கீழே விழுந்தனர். அங்கிருந்தவர்கள் 7 பேரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கார்த்தி மற்றும் ஜெகன் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மாடுமேய்த்த நபர் பலி
அரக்கோணம் அடுத்த மூதார் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (27). இவர் தனது மாட்டை நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். பலத்த மழை பெய்தபோது, மாடு மழையில் நனைந்தது. இதைக்கண்ட கேசவன் மற்றும் அவரது தாயார் தனம்மாள் (55) ஆகியோர் மாட்டை ஓட்டி வர மழையில் நனைத்தபடி நிலத்துக்கு சென்றனர். அப்போது கேசவன் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற அவரது தாய் தனம்மாள் படுகாயமடைந்தார்.

விவசாயி பலி
ஆரணி அருகே உள்ள வடுகசாத்து கிராமத்தில் வசிப்பவர் ரவி. கூலித் தொழிலாளி. இவரது மகன்கள் கோபி(16), அஜித்(14). இவர்கள் 2 பேரும், அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் மழை பெய்ததால், சாலையோரம் உள்ள மரத்தரடியில் ஒதுங்கி உள்ளனர். அப்போது மின்னல் தாக்கியதில் அஜித் உயிரிழந்தார். இதேபோல் திருவண்ணாமலை அடுத்த பழையமண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (32) என்பவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

ராமேஸ்வரத்தில் மழை
ராமேசுவரம் பகுதியில் காலை 10 மணியளவில் தொடங்கிய மழை 1 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. இதைப்போல தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளிலும் மழை பெய்ததால் ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக இருந்தது.

திண்டுக்கல்லில் மழை
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் மாலை 5 மணியில் இருந்து சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைப்போல வேடசந்தூரில் சுமார் 30 நிமிடங்கள் நல்ல மழை கொட்டியது.

ஈரோடு - கரூர்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று மாலை சுமார் 3 மணி முதல் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்தது.

மழை நீடிக்கும்
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே லட்சத் தீவு மற்றும் கர்நாடக மாநிலம் அருகே நிலவும் காற்று மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.












Click it and Unblock the Notifications