100 அடி கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பலி.. காப்பாற்ற முயன்ற தாத்தா மீட்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
அவனைக் காப்பாற்ற முயன்று பலியாகவிருந்த தாத்தாவை தீயணைப்புப் படையினர் வந்து பத்திரமாக மீட்டனர்.
கொட்டாரம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு விஷ்வா(6), வினீஷ்(4) என்ற 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர்.
அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சித்ராவின் தந்தை சுப்பிரமணியும் (65), அவரது மனைவி அழகம்மாளும்(60) தோட்ட வேலை செய்து வருகின்றனர். அந்த தோட்டத்தில் சுமார் 100 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது.
நேற்று காலை 10 மணியளவில் தாத்தாவை பார்ப்பதற்காக சிறுவர்கள் விஷ்வா மற்றும் வினீஷ் தோட்டத்துக்கு சென்றனர். தோட்டத்தின் உரிமையாளரும் தென்னை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அங்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் வினீஷ் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டான். இதை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர் அங்கு தோட்ட வேலை செய்து கொண்டிருந்த வினீஷின் தாத்தா சுப்பிரமணியிடம் கூறினார்.
உடனே சுப்பிரமணி தனது பேரனை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். அதற்குள் வினீஷ் தண்ணீருக்குள் மூழ்கி விட்டான். அவனை காப்பாற்ற முயன்ற சுப்பிரமணியனால் தொடர்ந்து நீந்த முடியாமல் கூச்சல் போட்டார்.
கன்னியாகுமரி போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி சுப்பிரமணியனை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவன் வினீசை மீட்கும் பணி நடந்தது. ஆனால் அவனை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.