விபத்துக்குள்ளான இன்டர்சிட்டி ரயிலில் தமிழக பயணிகள் 424 பேர் இருந்ததாக தகவல்
சேலம்: ஓசூர் அருகே விபத்துக்குள்ளான பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயிலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 424 பேர் பயணித்ததாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓசூர் அருகே கர்நாடகாவின் ஆனைக்கல் பகுதியில் பெங்களூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் 9 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த ரயில் தமிழகத்தின் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக எர்ணாகுளம் செல்வதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பயணிப்பது வழக்கும். இன்று விபத்துக்குள்ளான இந்த ரயிலில் மொத்தம் 424 பேர் பயணித்ததாக சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் இறங்குவதற்காக 270 பேர் பயணித்திருக்கின்றனர். விபத்துக்குள்ளான பெட்டிகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 176 பேர் இருந்துள்ளனர்.
இதனால் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் விபத்து குறித்து தகவலை தெரிவிக்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.