ஜிஎஸ்டி வரிக்கு கொங்கு மாவட்டங்களில் எதிர்ப்பு.. கரூர், ஈரோட்டில் 5,600 ஜவுளி நிறுவனங்கள் மூடல்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல் முறையாக தமிழகத்தில் கொங்கு மாவட்டங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
ஈரோடு: தமிழ் நாட்டில் முதன்முறையாகப் பெரிய அளவில் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிராக போராட்டம் நடக்க தொடங்கியுள்ளது.
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கரூர், ஈரோட்டில் நேற்று(வியாழன்) 5,600 ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ரூ.40 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு முதலீட்டாளர்கள் தான் அதிகளவில் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பெரும் ஜவுளி ஆலை அதிபர்களுக்கு சாதகமாகவும், விசைத்தறி தொழிலை நசுக்கும் வகையிலும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் பருத்தி ரகங்களுக்கு 5%, செயற்கை இழை ரகங்களான ரேயான், பாலி யெஸ்டர்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதித்து வரும் ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது விசைத்தறி தொழில் செய்வோர் மத்தியில் பெரிய அளவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற தொழில்கள் குறித்துக் கவலைப்படும் தமிழக அரசு நெசவுத் தொழில் குறித்து கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் இருக்கிறது என்று அவர்கள் வெளிப்படையாகவே புகார்கள் கூறியுள்ளனர்.
பன்மடங்கு வரி கட்டவேண்டும்
ஒரு விசைத்தறி உரிமையாளர் பெரிய ஆலையில் இருந்து 18% வரியை செலுத்தி செயற்கை ரக நூலை வாங்கி அதை விற்கும் போது, 5% வரியை செலுத்தி விற்க வேண்டும்.
பாதிப்பில் 10 லட்சம் விசைத்தறி குடும்பங்கள்
செயற்கை இழையை தயாரிக்கும் ஆலையுடன் விசைத்தறியாளர்கள் போட்டியிட முடியாது. இதன் மூலம் இத்தொழில் பெரிதும் நசுக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள 10 லட்சம் விசைத்தறி உற்பத்தியாளர் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள்.
அடையாள வேலைநிறுத்தம்
ஜிஎஸ்டி வரியை எதிர்த்து கரூர், ஈரோடு மாவட்டங்களில் ஜூன் 15ம் தேதி (நேற்று) அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள், விசைத்தறியாளர்கள் சார்பில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
கரூர், ஈரோடு மாவட்டங்களில் கொந்தளிப்பு
அதன்படி 2 மாவட்டங்களிலும் இன்று ஜவுளி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. கரூரில் 400 ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
வெறிச்சோடிய கரூர்
கரூர் செங்குந்தபுரத்தில் 12 தெருக்கள் உள்ளன. அனைத்து தெருக்களிலும் ஜவுளி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இன்று ஜவுளி நிறுவனங்கள் மூடப்பட்டதால், இந்த தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
30,000 தொழிலாளர்கள் வரவில்லை
கரூரில் உள்ள ஜவுளி நிறுவனங்களுக்கு இன்று சுமார் 30,000 தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை. மேலும் நூல் வணிகம், சாயப்பொருள் விற்பனையகம், தையல் நிறுவனங்கள், பேக்கிங் நிறுவனங்கள், சாயமிடுதல், சலவையிடுதல் ஆகிய 200 உப தொழில் நிறுவனங்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன.
ஜவுளி உற்பத்திக் கடும் பாதிப்பு
இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரூ.8 கோடி முதல் 10 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி கடைகள், யூனிட்டுகள், மில் ஜவுளி விற்பனையாளர்கள், நூல் வியாபாரிகள், பிளீச்சிங், விசைத்தறி உரிமையாளர்கள், ஸ்கிரீன் பிரிண்ட்டிங் யூனிட்டுகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
ரூ. 40 கோடி வர்த்தக இழப்பு
ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்தால் கரூர் மற்றும் ஈரோட்டில் ரூ. 40 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.