5 பசு மாடுகள் அடுத்தடுத்து மர்ம மரணம்.. நெல்லையில் விவசாயிகள் பீதி
நெல்லையில் அடுத்தடுத்து 5 பசு மாடுகள் மர்மமான முறையில் மரணமடைந்தது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
திருநெல்வேலி: நெல்லை அருகே திடீர் திடீரென பசு மாடுகள் இறந்ததால் விவசாயிகள் பயத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்துலுக்கப்பட்டியில் வசிப்பவர் கணேசன். விவசாயியான இவர் ஜெர்சி பசுக்கள் உள்பட 15 மாடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பியதும் தொழுவத்தில் கட்டி போட்டிருந்தார். சிறிது நேரத்தில் 5 ஜெர்சி பசுக்கள் அடுத்தடுத்து தரையில் விழுந்து மடிந்தன. மாடுகள் எழுப்பிய ஒரு விதமான சப்தத்தைக் கேட்டு தொழுவத்திற்கு ஓடி வந்த கணேசன் ஐந்து ஜெர்சி பசுக்கள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்தார்.
தகவல் அறிந்ததும் பூங்கோதை எம்எல்ஏ சம்பவ இடத்துக்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார். கணேசன் தனது இறந்த பசுக்களுக்கு காப்பீடு செய்திருப்பதை அறிந்த எம்எல்ஏ அம்பை கால்நடை துறை உதவி இயக்குனருடன் பேசி கணேசனுக்கு உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
மேலும், பசுக்கள் தொற்று நோயால் இறந்திருந்தால் அந்த நோய் மற்ற பசுக்களுக்கும் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த பசுக்களின் இரத்த மாதிரிகளை எடுத்து சென்றனர். ஒரே நேரத்தில் 5 பசுக்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் விவசாயிகளிடம் பீதியை கிளம்பியுள்ளது.