27 வருடமாக... 75 வயது தொழிற்சங்கத் தலைவர் மீது 53 வயதுப் பெண் பரபரப்பு பாலியல் புகார்
சென்னை: கடந்த 27 வருடமாக என்னை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வரும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி 53 வயதுப் பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மனு செய்துள்ளார் அந்த தொழிற்சங்கத் தலைவர். சென்னையில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள நபரின் பெயர் ரங்கராஜன். இவருக்கு இப்போது 75 வயதாகிறது. இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர் யூனியன் தலைவர் ஆவார்.
இவர் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ள புகாரில், எனக்கு கடந்த 1978ல் திருமணம் நடந்தது. எனது கணவர் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எங்களுக்கு 3 ஆண் குழந்தைகள். திருமணமாகி 5 ஆண்டுகள் கழித்து ஒரு விபத்தில் எனது கணவர் மரணமடைந்தார். அவருக்கு பிறகு, எனக்கு கருணை அடிப்படையில் இந்திய ஆயில் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.
தற்போதும் அங்கு பணியாற்றி வருகிறேன். இந்நிலையில், அந்த நிறுவனத்தில் உள்ள யூனியன் தலைவர் ரங்கராஜன் என்பவர், தனது பதவி அதிகாரத்தைக் காட்டி எனது வீட்டுக்கு அடிக்கடி வந்தார். இதனால் வெறுப்படைந்த எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதைத் தடுத்த ரங்கராஜன் என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார். அவரின் அதிகாரத்தை பயன்படுத்தி தொடர்ந்து என்னை அவரின் கட்டாயத்துக்கு அடிபணியவைத்தார்.
குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு 27 ஆண்டுகாலம் அவருடன் அவரின் தொந்தரவை பொறுத்துக்கொண்டேன். தற்போது, எனக்கு 7 ஆண்டுகள் பணி உள்ளது. இந்நிலையில், என்னை உடல்ரீதியாக தொந்தரவு செய்வதுடன் வேலைக்கும் பிரச்னை ஏற்படுத்திவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் அய்னாவரம் மகளிர் காவல் நிலையத்திற்குப் போனது. ஆனால் போலீஸார் கம்மென்று இருந்துள்ளனர். இதையடுதது அப்பெண் தற்போது எழும்பூர் கோர்ட்டை நாடியுள்ளார். இதை விசாரித்த கோர்ட், வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது போலீஸார், ரங்கராஜன் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து ரங்கராஜன் முன்ஜாமீன் கோரி செஷன்ஸ் கோர்ட்டை நாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதி, இரு தரப்பும் வருகிற 10ம் தேதி சமசரத் தீர்வு மையத்தை நாடி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.