கடலூரில் 75 % பேருந்துகள் பணிமனைக்குத் திரும்பின... சிறப்பு வகுப்புக்கு சென்ற மாணவர்கள் தவிப்பு!
போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால் கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
கடலூர் : ஊதிய உயர்வு தொடர்பாக ஊழியர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் கடலூர் மாவட்டத்தில் சுமார் 75 சதவீத வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சிறப்பு வகுப்புகளுக்கு சென்ற கிராமப்புற மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அடிப்படை ஊதியம், தர ஊதியத்தை 2.57 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுடன் தொழிற்சங்கத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது. இதனையடுத்து ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெருநகரங்களில் பயணிகள் பாதி வழியிலேயே இறக்கிவிட்டு பேருந்துகளை ஓட்டுநர்கள் பணிமனையில் நிறுத்திவிட்டனர். இதனால் பேருந்துக்காக காத்திருந்த மக்கள் எப்படி வீடு திரும்புவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மக்கள் பாதிப்பு
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் 75 சதவிகித பேருந்துகள் பணிமனைக்கு திரும்பியுள்ளன. எஞ்சியுள்ள 25 சதவீத பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்படுமா அல்லது பாதயிலேயே நிறுத்தப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
அரசுப் போக்குவரத்தை நம்பியே
கடலூரைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம மக்கள் அரசுப் பேருந்துகளை நம்பியே உள்ளனர். இந்நிலையில் திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் சிறப்பு வகுப்புகளுக்கு சென்ற பள்ளி மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
விழுப்புரத்திலும் இதே நிலை
இதே போன்று விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலும் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டு பணிமனைக்கு திருப்பி அனுப்பப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவை, மதுரையிலும் பேருந்து நிறுத்தம்
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டமானது மற்ற தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. கோவை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்களின் சிரமங்களை புரிந்து கொள்வார்கள் என்று போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றரை ஆண்டுகள் போராடியும் பலன் இல்லாததாலேயே போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் கூறியுள்ளனர்.