என் மேலே சத்தியம் செஞ்சீங்களேப்பா.. ஏம்ப்பா மறுபடியும் இப்படி செஞ்சீங்க..?
தந்தை மது அருந்தியதால் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video
தருமபுரி: "இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணீங்களே.. ஏம்ப்பா... திரும்பவும் குடிச்சிட்டு வந்தீங்க" - இதுதான் தருமபுரி கனிமொழி அப்பாவிடம் பேசிய கடைசி வார்த்தைகள். கனிமொழி ஏன் சத்தியம் வாங்கினார்? பிறகு அவர் என்ன செய்தார்?
தருமபுரி மாவட்டம் மாரவாடி என்ற கிராமம் உள்ளது. இங்கே வசித்து வரும் தம்பதி முருகன்-பூங்கொடி. இவர்களுக்கு ரஞ்சனி, கனிமொழி என்ற இரண்டு மகள்கள். முருகன் ஒரு லாரி டிரைவர். ஆனா எப்பவுமே குடிதான். எவ்வளவு சம்பாதிச்சதாலும், எல்லாமே குடிக்குத்தான் போய் சேரும்.
தன் அப்பா இப்படி தினமும் குடிச்சிட்டு வருவது 9-ம் வகுப்பு படிக்கும் மகள் கனிமொழிக்கு கொஞ்சமும் பிடிக்கவே இல்லை. அதனால் ஒருநாள் கனிமொழி தன் அப்பாவிடம், "அப்பா... நீங்க குடிக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல. இனிமே நீங்க குடிக்கவே கூடாதுப்பா... என் தலைமேல் அடிச்சு சத்தியம் பண்ணி குடுங்க" என்று கேட்டார். கனிமொழி மேல் முருகனுக்கு எப்பவுமே பாசம் அதிகம்.
சத்தியம் செய்த முருகன்
மகள் இப்படி அக்கறையாகவும், ஆசையாகவும் கேட்டதை நினைத்த முருகனும், "சரிம்மா.. இனிமே அப்பா குடிக்க மாட்டேன்... உன்மேல சத்தியம்" என்று சத்தியமும் செய்துள்ளார். இப்படி மகளிடம் சத்தியம் செய்து கொடுத்ததை அடுத்து முருகனும் தண்ணி அடிக்காமல் இருந்துள்ளார். கிட்டத்தட்ட 3 மாசமாக அந்த வாடை கூட இல்லாமல் முருகன் இருந்துள்ளார். அப்பா தினமும் குடிச்சிட்டு வராமல் இருப்பதை பார்த்த கனிமொழிக்கு சந்தோஷம் தாங்கல. சும்மா இருக்கும்போதெல்லாம் அப்பாவை அப்பப்போ கொஞ்சிட்டே இருந்துள்ளார்.
ஏன் குடிச்சீங்கப்பா...
இந்த நிலையில் 2 நாள் முன்பு வீட்டுக்குள் நுழைந்த முருகன் மீதிருந்து மது வாடை குப்பென்று வீசியது. இதனை கண்ட கனிமொழி அப்பாவிடம் சண்டைக்கே போய்விட்டார். "இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணீங்களே.. ஏம்ப்பா... திரும்பவும் குடிச்சிட்டு வந்தீங்க"? என்று சண்டை போட்டார். அதற்கு முருகனோ, "இல்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் மட்டும் குடிச்சிக்கிறேன்... இனி அப்பா குடிக்கவே மாட்டேன்" என்று சொல்லி கையிலிருந்த மதுபாட்டிலை பாதி மதுவுடன் அங்கேயே மீதம் வைத்துவிட்டார்.
ஆத்திரத்தில் கனிமொழி
உடனே கனிமொழி வீட்டிலிருந்தோரிடம் கூறினார் "இனிமேல் அப்பா குடிச்சா நான் தற்கொலைதான் செஞ்சிப்பேன்" என்று சொல்லிவிட்டார். பிறகு மறுநாள் காலை பள்ளிக்கு சென்று நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினார் கனிமொழி. அப்போது அங்கே மீதி வைத்திருந்த சரக்கு பாட்டில் காலியாக இருந்தது. இதை பார்த்ததும் கனிமொழிக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
தூக்கு போட்டு தற்கொலை
தனது அம்மா பூங்கொடியிடம்,"அப்பா, தண்ணி அடிச்சாராமா?" என்று கனிமொழி கேட்டார். அதற்கு பூங்கொடியும், "ஆமாம்மா... உன் அப்பா உனக்கு கொடுத்த சத்தியத்தை மீறி குடிச்சிட்டு தூங்கி கொண்டு இருக்கார் பார்..." என்று பதில் சொன்னார். எவ்வளவு சொல்லியும் கேட்காமல், தனது சத்தியத்தையும் மீறி அப்பா இப்படி குடித்துவிட்டாரே என்று, வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தாளிட்டு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டிலுள்ளவர்கள் கதவை உடைத்து கனிமொழியை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடியும் பாதியிலேயே கனிமொழி உயிர் பிரிந்தது.
மறக்க முடியாத தினேஷ்
கனிமொழி மிகவும் புத்திசாலியாம். படிப்பிலும் படு கெட்டிக்காரியாம். தனது அப்பா தினமும் குடிப்பதை நினைத்து அடிக்கடி நண்பர்களிடம் வருத்தப்படுவாராம். மதுக்கடைகளால் நிறைய குடும்பங்கள் அழிகிறது என்று நண்பர்கள், ஆசிரியர்களிடம் சொல்லிக் கொண்டே இருப்பாராம். ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படித்தான் தினேஷ்குமார் என்ற மாணவன் குடிகார தந்தை திருந்த வேண்டும் என்பதற்காக தற்கொலை செய்து கொண்டதுடன், ஆவியாக வந்து டாஸ்மாக் கடைகளை உடைப்பேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கினார்.
காவு வாங்கும் உயிர்கள்
இப்போது கனிமொழி. இந்த குடிகார அப்பன்களால் இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக போகின்றனவோ தெரியவில்லை. அரசாங்கத்தின் பண வெறிக்கு எத்தனை உயிர்கள் காவு வாங்கப்படுமோ தெரியவில்லை. இந்த டாஸ்மாக் அட்டூழியத்தினால் இன்னும் எத்தனை குடும்பங்களை நாசம் செய்ய போகிறதோ தெரியவில்லை. டாஸ்மாக்கினால் எத்தனையோ பேர்களின் வயிற்றெரிச்சல்கள் கூடிக்கொண்டுதான் போகிறது. 15, 16 வயது பிள்ளைகளுக்கு இருக்கும் அக்கறையும், ஆவேசமும், கூட நாட்டை ஆள்பவர்களுக்கு இல்லாமல் போனது அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.