எல்லா பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. கல்வி கேட்டு.. உயர்நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை: தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், " பொருளாதாரம், சமூகம், கலாச்சார பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2010ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் நீட் தேர்வில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவதாகவும், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இனியும் தமிழகத்தில் அரசு மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், கிராமப்புற மாணவர்கள் சிபிஎஸ்இ மாணவர்களுடன் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும்.
பொருளாதார சூழல் காரணமாக தமிழக கிராமப்புற மாணவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர முடியாமல், சமச்சீர் கல்வி வழங்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
கேரள அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டமே பின்பற்றப்படுவதாகவும், அதேபோல், தமிழகத்திலும் இருந்தால், கிராமப்புற மாணவர்களும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்றும்" மனுதாரர் பாபு அப்துல்லா தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications