திரைத்துறையினர் அரசியலுக்கு வரலாம்... ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும் காரணம் என்ன?
தமிழகத்திற்கு நல்ல தலைமை இல்லை என்ற ஆதங்கம் திரைத்துறையினர் மத்தியல் இருக்கலாம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு நல்ல தலைமை இல்லை என்ற ஆதங்கம் திரைத்துறையினர் மத்தியில் இருக்கலாம் அதன் வெளிப்பாடாகவே திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் தான் காலடி வைத்து 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லைவ் கான்செர்ட் ஒன்றை நடத்துகிறார். இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளும் ஏ.ஆர். ரஹ்மானின் பதில்களும் இதோ.
திரைத்துறையினர் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள். ரஜினி, அரசியலுக்கு வந்திருக்கிறார், பிரகாஷ்ராஜ் தொடர்ந்து அரசியல் கருத்துகளை கூறி வருகிறார்?
ரஹ்மான் பதில்: தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர் வேண்டும் என்ற ஆதங்கம் திரைத்துறையினர் மத்தியில் இருக்கலாம். சும்மா எல்லோருக்கும் அப்படி தோன்றி விடாது அல்லவா?
ரஜினியின் ஆன்மிக அரசியல் எடுபடுமா? ஆன்மிக அரசியல் அனைத்து மதத்தையும் சேர்த்ததாக இருக்குமா அல்லது ஒரு மதத்தை சார்ந்ததாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ரஹ்மான் பதில்: அவருடைய பேச்சை நான் பார்த்தேன், ரஜினி மதச்சார்பற்ற ஆன்மிக அரசியல் என்ற தான் சொல்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்குத் தான் தெரியும். எனினும் அவர் நல்ல அர்த்தத்தில் தான் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறேன்.
ரஜினியுடன் இணைந்து அரசியல் பணியாற்றுவீர்களா?
ரஹ்மான் பதில்: ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சிந்தித்து எனது நிலைப்பாட்டை தெரிவிக்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதை வாழ்த்துகிறேன் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் இறுதியில் 25 வருஷம் என்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு நன்றி, எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் கூறினார்.