தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்த பாம்பு.. விரட்டி பிடித்த தீயணைப்பு துறையினர் !
சென்னை: தமிழக தலைமைச் செயலகத்துக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதை தீயணைப்பு வீரர்கள் போராடி பிடித்தனர்.
தமிழக சட்டசபை நேற்று இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ குறித்து பேச அனுமதி அளிக்கும்படி திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால் சபாநாயகர் பேச அனுமதி மறுத்தார். இதையடுத்து சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் அமளி காரணமாக திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் தனபால் உத்தவிட்டார். பின்னர் வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இரண்டாம் நாளான இன்றும் ஸ்டாலின் இந்த பிரச்சினையை கிளப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று தலைமை செயலகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. பாதுகாப்பு போலீசார், பாம்பு ஒன்று அதிவேகமாக செல்வதை பார்த்துள்ளனர். தலைமை செயலக செய்தியாளர் அறைக்கு அருகில் உள்ள நூலக அலுவலகத்திற்குள் அந்த பாம்பு சென்றுள்ளது. இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாம்பை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த 8 அடி நீளமுள்ள சாரப்பாம்பு பிடிபட்டது. பாம்பை பிடிக்கப்படும் பொழுது பாம்பின் வால் கட்டாகிவிட்டது. பிடிப்பட்ட பாம்பு கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் பாம்பு பண்னையில் விடப்பட்டது. இதனால் தலமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.