என் மகளை ஐஏஎஸ் ஆக்குவேன்.. மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன்.. புலவாமா தியாகி சிவச்சந்திரன் மனைவி
தமிழக அரசுக்கு வீரர் சிவசுப்பிரமணி மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்
சென்னை: "என் கணவர் ஆசைப்படியே மகனை ராணுவத்துக்கு அனுப்புவேன்.. என் மகளை ஐஏஎஸ் ஆக்குவேன்... அதேபோல, பிப்ரவரி 14 காதலர் தினத்தை 44 ராணுவ வீரர்கள் தினமாக அரசு அறிவிக்க வேண்டும்" என்று மறைந்த வீரர் சிவசந்திரனின் மனைவி காந்திமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் நடந்து இன்றோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது.. ஆனால் எப்படி, ஏன், எதனால் இந்த தாக்குதல், அந்த வெடிமருந்துகள் எங்கிருந்ததான் வந்தது என்பது புரியாத புதிராகவே தொடர்கிறது.
கொல்லப்பட்ட 40-க்கும் மேற்பட்டோரில் 2 தமிழக வீரர்களும் அடக்கம்... தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன்.. இருவருக்கும் சின்ன வயசு. இருவருமே திருமணம் ஆனவர்கள்.
சிவசந்திரன்
இதில், சுப்பிரமணிக்கு குழந்தை இல்லை. சிவசந்திரனுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருந்த நிலையில், அவரது மனைவி காந்திமதி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.. இதனால் கணவன் இறந்ததை கூட கர்ப்பிணி பெண்ணிடம் எப்படி சொல்வது என்று திணறியது அந்த கிராமம்! விஷயம் தெரிந்ததுமே இரு இளம் விதவைகளும் கொதித்து போனார்கள்.. தீவிரவாதிகளை வேரோடு அழியுங்கள் என்று கண்ணீருடன் வேண்டுகோளும் விடுத்தனர்.
கோரிக்கை
இந்நிலையில், காதலர் தினத்தை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என சிவசந்திரன் மனைவி காந்திமதி கோரிக்கை விடுத்துள்ளார். சிவசந்திரன் சமாதியில் மணிமண்டபம் கட்டப்பட்டு திறப்பு விழா நடக்க உள்ளது.. அதற்கான முன்னேற்பாடுகளும் மும்முரமாக நடந்து வருகின்றது. இதுகுறித்து காந்திமதி சொல்லும்போது, "பிப்ரவரி 14 காதலர் தினத்தை புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த 44 ராணுவ வீரர்கள் தினமாக அரசு அறிவிக்க வேண்டும்.
சிலை திறப்பு
இதனால் ராணுவத்தில் தனது நாட்டை காக்க வீரர்கள் செய்த தியாகம் பற்றி ஒவ்வொருவரும் அறிய செய்ய வேண்டும்... ஆனால், அரியலூர் கலெக்டர் ஆபீசில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சிலை திறக்கப்படும் என்று அறிவித்து ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது வேதனையாக உள்ளது. எங்களுக்கென்று அரசு எந்த செயலையும் செய்யாமல் இருந்தாலும் பரவாயில்லை.
மகன், மகள்
ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்கள் சிலையை உடனே நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்தார்கள் என்பதே தெரியவரும்... அவர்கள் இந்த தாய் நாட்டிற்காக தங்களது உயிரையும் தியாகம் செய்தார்கள் என்பதும் உலகம் அறிய வரும்.. என் மகனை ராணுவத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும், என் மகளை ஐஏஎஸ் ஆக்குவது என்றும் என் கணவர் விரும்பினார்.. அவர் ஆசைப்படியே என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவேன்" என்றார்.