ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் புனித நீராடல்- சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்
ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சங்கல்பம், பிதுர்கர்மா போன்ற பூஜைகளை கடற்கரையில் செய்தனர்.
ஆடி அமாவாசை நாளில் ஆறு, குளங்கள், கடற்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.

புனித நீராடிய பக்தர்கள்
இன்றைக்கு ஆடி அமாவாசை என்பதால் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், திருச்செந்தூர் உள்ளிட்ட புனித தலங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பூம்புகாரிலும் காவிரி நதி கடலில் கலக்கும் இடத்தில் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சியில் போர்வெல்
ஆடி அமாவாசைக்கு காவிரியில் புனித நீராட இயலாத நிலை உள்ளது. பக்தர்களுக்காக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு உள்ளிட்ட இடங்களில் போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பவானி கூடுதுறை
ஈரோடு பவானி கூடுதுறை, கொடுமுடி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட இடங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்தக்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வோர் ஆண்டும் 4 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாகவே பக்தர்கள் மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தண்ணீர் வசதி
இந்த கோவிலுக்கு வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை பாதை, சாப்டூர் அருகில் உள்ள முனிஸ்வரன் கோவில் வாழைத்தோப்பு பாதை ஆகிய இரண்டு பாதைகளிலும் வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, இரவு நேரங்களில் மலைப்பகுதியில் செல்ல விளக்கு வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறுகலான பாதை
மற்ற பாதைகளை விட தாணிப்பாறை வழியாகத்தான் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில் கருப்புச்சாமி கோவில், சங்கிலிப்பாறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 2 கிலோ மீட்டர் தூர பகுதியில் ஒருவர் மட்டுமே செல்லும் அளவிற்கு பாதை உள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் நேரத்தில் இங்கு நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல சங்கிலிப்பறையிலிருந்து கோரக்கர் குகைவரை உள்ள மலைப்பாதை மிகவும் குறுகலான பாதை இங்கும் கூட்ட நெரிசல் ஏற்படும் போது பக்தர் நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

பக்தர் மரணம்
வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில், சின்ன பசுக்கடைப் பகுதியில் சுவாமி தரிசனம் செய்ய சென்ற விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதி அ.வடுவார்பட்டியைச் சேர்ந்த பழனி ஆண்டவர் மகன் வீரணன் (62) என்பவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் உயிரிழந்தார். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரது உடலை, டோலி மூலம் வத்ராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து, சாப்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சொரிமுத்து ஐயனார் கோவில்
நெல்லைமாவட்டம் பாபநாசம், காரையாறில் அமைந்துள்ள சொரிமுத்து ஐயனார் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குற்றாலத்தில் தர்ப்பணம்
இன்று முழுமையான அமாவாசை என்பதால் காலைமுதலே குற்றால அருவிகளில்ஆயிரக்கணக்கனோர் திரண்டுவந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.குற்றால அருவிபகுதிகளில் பயணிகள்,கூட்டமும்,தர்ப்பணம் செய்ய வந்தவர்கள் கூட்டமும் அலைமோதியது.












Click it and Unblock the Notifications