வெடிகுண்டு வழக்கு: நக்சலைட் திருச்செல்வம் உள்ளிட்ட மூவருக்கு 4 நாள் போலீஸ் கஸ்டடி
மதுரை: பைப் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படைத்தலைவர் திருச்செல்வம் உள்ளிட்ட மூன்று பேரை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுரை ஒத்தக்கடையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் கடந்த பிப்ரவரி 12ம்தேதி ‘பைப்' வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் தமிழர் விடுதலைப்படை என அச்சிடப்பட்டிருந்த நோட்டீசும் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மேலூரில் பகுதியில் பதுங்கி இருந்த தமிழர் விடுதலைப் படையின் தலைவர் திருச்செல்வம், சினிமா டைரக்டர் தங்கராஜ், கவியரசு ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில் மானகிரியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டின் அருகே புதருக்குள் வைக்கப்பட்டிருந்த ‘பைப்' வெடிகுண்டை கைப்பற்றினர்.
இந்நிலையில் கைதான 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டுமென ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மேலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதி மகேந்திர பூபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 3 பேரையும் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்து உத்தரவிட்டார். வருகிற திங்கட்கிழமை 5 மணிக்குள் அவர்களை ஆஜர்படுத்த வேண்டுமென போலீசாருக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக கோர்ட்டுக்கு 3 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் தமிழ் வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.