அருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு- ஆதித்தமிழர் பேரவையின் மற்றொரு நிர்வாகி தீக்குளிப்பு!
திருச்சி: அருந்ததியினருக்கு 6% இடஒதுக்கீடு கோரி ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிர் அணி செயலாளர் பழனியம்மாள் என்கிற ராணி தீக்குளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்டோருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததி இனத்தவருக்கு 6% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது ஆதித் தமிழர் பேரவையின் நீண்டகால கோரிக்கை. இக்கோரிக்கையை வலியுறுத்தி அந்த அமைப்பின் மாநில துணை செயலர் நீலவேந்தன் கடந்த 2 மாதங்களுக்கு திருப்பூரில் தீக்குளித்து உயிர்நீத்தார்.
இன்று அதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சியில் அந்த அமைப்பின் மாநில மகளிர் அணிச் செயலர் பழனியம்மாள் என்ற ராணி தீக்குளித்தார். அவர் 90% காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவர் அளித்த வாக்குமூலத்தில், அருந்திய இன மக்கள் தினம் தினம் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வறுமையை போக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக தீக்குளித்தேன்.
தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கிட்டை கோரி தீக்குளித்தேன் என்று தெரிவித்துள்ளார். அவர் திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனையில் உதவி பராமரிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த சம்பவத்தால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.