ரஜினியின் "தம்பி"யிடம் ரூ. 17 லட்சம் பணத்தை சுருட்டிய டுபாக்கூர் "டாக்டர்கள்"!
சென்னை: படிக்காதவன் படத்தில் ரஜினிகாந்த்துக்குத் தம்பியாக நடித்த நடிகர் விஜசய்பாபுவிடம், அவரது மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 17 லட்சத்தை மோசடி செய்ததாக, சமீபத்தில் சென்னையில் கைதான போலி டாக்டர் தம்பதி மீது புகார் எழுந்துள்ளது.
எம்.பி.பி.எஸ். என்றால் என்ன, எம்.டி என்றால் என்ன என்று கூட தெரியாத "டாக்டர்கள்" இவர்கள். அவர்களைக் கைது செய்த போலீஸார் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டபோது இருவரும் பேந்தப் பேந்த விழித்துள்ளனர். அந்த அளவுக்கு மிகப் பெரிய டுபாக்கூர் தம்பதி இது.
அந்த தம்பதியின் பெயர் அனந்தகுமார், நிர்மலா. விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள். இருவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையின்போது, போலியாக டாக்டர் தொழில் செய்தது மட்டுமல்லாமல், பலரிடம் பெருமளவில் பண மோசடியிலும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்துடன் படிக்காதவன் படத்தில் அவருக்கு தம்பி வேடத்தில் நடித்தவர் நடிகர் விஜய்பாபு. இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டிவி தொடரில் நடித்துள்ளார். இவரிடமும் இந்த தம்பதி ரூ.17 லட்சத்தை சுருட்டி உள்ளனர். இதுதொடர்பாக விஜய்பாபு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், போலி டாக்டர் தம்பதி நான் வசிக்கும் விருகம்பாக்கம் பகுதியில்தான் வசித்தனர். தினமும் நான் நடை பயிற்சிக்காக நடந்து செல்லும்போது, போலி டாக்டர் ஆனந்தகுமாரும் நடைபயிற்சிக்கு வருவார். அப்போது அவர் தனக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் நன்கு பழக்கம் இருப்பதாக தெரிவிப்பார். செல்போனில் கூட பேசுவார். ஆந்திர மாநில தலைமைச்செயலாளர் தனது நண்பர் என்றார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கதை விட்டார்.
எனது மகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கால் சென்டரில் பணிபுரிந்தான். அவனுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் நல்ல வேலை வாங்கித்தருவதாக சொல்லி என்னிடம் ரூ.20 லட்சம் பெற்றார். என் முன்னாடியே செல்போனில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரிடம் பேசினார். ஆனால் அவர் சொன்ன பெயரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரும் ஆந்திராவில் இல்லை என்பதை நான் விசாரித்தபோது தெரியவந்தது.
அதன்பிறகுதான் ஆனந்தகுமார் ஒரு மோசடி பேர் வழி என்பதை நான் தெரிந்துகொண்டேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ரூ.3 லட்சம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.17 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.