பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக அம்மா அணி மா.செ கூட்டம்... அடுத்த ஆப்ரேஷனா?
அதிமுக அம்மா கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது.
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக அம்மா கட்சி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அதிமுக ஆட்சி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று மே 23ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன.

ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்து நிபந்தனைகள் விதிக்கப்பட்டு வருவதாலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனத்தாலும் அதிமுக இரு அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது இரட்டை இலை மற்றும் அதிமுக கட்சியின் பெயர் ஆகியவை முடக்கப்பட்டன. அதேபோல், சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட விவகாரமும் தேர்தல் ஆணையத்தில் தற்போது நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக ஓபிஎஸ் அணி தரப்பில் தற்போது வரை பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 12 ஆயிரத்து 500 பக்க ஆவணங்களை ஈபிஎஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அதிமுக அம்மா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரு அணிகள் இணைப்பு குறித்து அடுத்த ஆபரேன் குறித்து விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பானவை முக்கியமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அம்மா அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 100 சதவீதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications