தூத்துக்குடி: பின் தங்குகிறது அதிமுக.. அதிர்ச்சியில் தொண்டர்கள்- மதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?
தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதியில் ஆறுமுனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டணி பலத்தால் திமுக, மதிமுக முன்னோக்கி செல்கிறது. அதேசமயம், சரியான பிரசார பலம், திட்டமிடுதல் இல்லாததால் அதிமுக பின்தங்கி வருவது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரிக்கான 40தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடக்கிறது.
தேர்தலுக்கான கூட்டணிகள் ஒரளவிற்கு முடிந்துள்ள நிலையில் அதிமுக, கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகிறது. இதர கட்சிகள் கூட்டணி அமைந்து போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணி
திமுக அணியானது விடுதலைசிறுத்தைகள், மனிதநேயமக்கள்கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தல் களம் இறங்கியுள்ளது.
பாஜக பலத்துடன் மதிமுக
மதிமுகவானது பாரதிய ஜனதா, ஐஜேகே, பாமக, தேமுதிக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளது.
பெரியசாமி மகன் ஜெகன்- மதிமுகவின் ஜோயல்
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பெரியசாமியின் மகன் ஜெகன், அதிமுக சார்பில் வழக்கறிஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் ஆகியோர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மியில் புஷ்பராயன்
இதுபோக கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர். ஆம்ஆத்மி சார்பில் புஷ்பராயன் களம் இறங்கியுள்ளார். இப்படியாக தூத்துக்குடி தொகுதியில் ஆறுமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.
ஸ்டாலினை நம்பி திமுக
திமுகவிற்கு ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரின் பிரசாரம் பலமாக உள்ளது. இதற்கிடையே ஜெகனை எப்படியாவது வெற்றிபெற செய்யவேண்டும் என்பதில் மாவட்ட செயலாளர் பெரியசாமி வரிந்து கட்டிக்கொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி வருகிறார்.
பணப் பட்டுவாடா கன ஜோர்
இதற்கேற்ப, கூட்டணி கட்சியினர் மற்றும் சிற்சில அமைப்புகள் உள்ளிட்டவர்களுக்கு பணப்பட்டுவாடாவும் கனஜோராக நடந்து வருகிறது. இதனால் திமுக தேர்தல் களத்தில் முன்னோக்கி பயணிக்கிறது. தொண்டர்களுக்கு தேவையானது எல்லாம் கிடைப்பதால் உற்சாகமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
எடுபடாத ஜெயலலிதா பிரசாரம்
இதுவே அதிமுக அணியில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரம் மற்றும் நடிகர்களின் பிரசாரம் மக்களிடத்தில் அவ்வளவாக எடுபடவில்லை.
காசு கொடுக்காததால் பெண்கள் ஆத்திரம்
அதுவும் முதல்வரின் பிரசாரத்திற்கு வெளியூர்களில் அழைத்துவரப்பட்ட பெண்களுக்கு ரூ.200க்கு பதிலாக ரூ.100தான் கொடுக்கப்பட்டதாம். இது பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாப்பாடு கூட தராத அதிமுக
இதற்கிடையே அதிமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்களுக்கு சாப்பாடு கூட வழங்கப்படவில்லையாம். தொண்டர்களுக்கு தேர்தல் பணிக்கு ஏற்ப பணம், சாப்பாடு கொடுக்காதது போன்ற காரணங்களால் அதிமுக பின்தங்கியே இருக்கிறது. தொண்டர்களும் உற்சாகம் இல்லாமல் சோர்ந்து போய் உள்ளனர்.
உற்சாக கோலத்தில் ஜோயல்
இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ஜோயல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களம் இறங்கியுள்ளார்.
பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்
மதிமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி மக்களின் பிரச்சனைகளையும் கண்டறிந்து அது தீர்வதற்காக முதல் ஆளாக குரல் கொடுத்து வருபவர் ஆவார். தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக கட்சி, மக்கள் பணியாற்றி வரும் ஜோயல் மக்களிடத்தில் ஏற்கனவே நன்கு அறிமுகமாகியுள்ளது மதிமுகவின் கூட்டணிக்கு பெரும் பலமாக உள்ளது.
மதிமுகவுக்கு நல்ல வாய்ப்பு
இந்த கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜக, ஐஜேகே என்று பட்டியல் நீள்வதால் மதிமுகவிற்கு மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு எழுந்துள்ளது. திமுக, அதிமுகவிற்கு நிகராக போட்டி களத்தில் மதிமுக வேட்பாளர் ஜோயல் உள்ளார். இதனால் மதிமுகவும் தேர்தல் களத்தில் முன்னோக்கி பயணிக்கிறது. இந்திய கம்யூனிஸ்டு சார்பில் வழக்கறிஞர் மோகன்ராஜ் களம் இறங்கியுள்ளார்.
காணாமல் போன காங்கிரஸ்
காங்கிரஸ் மட்டும் வேட்பாளர் அறிவிப்பிற்காக காத்துகொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி போட்டி களத்தில் திமுக, மதிமுக, அதிமுக அணிகளே பலமாக உள்ளன. வரும் நாட்களில் இதரகட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கவலையில் அதிமுகவினர்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு 6முனை போட்டி ஏற்பட்டுள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, மதிமுக முன்னோக்கி செல்லும் சூழலில் அதிமுக பின்னோக்கி வருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.