அதிமுக பொதுச்செயலாளரை பொதுக்குழு நியமிக்க முடியாது... கட்சி விதி சொல்வது இதுதான்!
அதிமுக கட்சி விதிகளின் அக்கட்சி பொதுச்செயலரை பொதுக்குழுவால் நியமிக்க முடியாது... இதை சுட்டிக்காட்டிதான் தேர்தல் ஆணையத்துடன் மல்லுக்கட்டி வருகிறது ஓபிஎஸ் அதிமுக
சென்னை: அதிமுக பொதுச்செயலரை பொதுக் குழு உறுப்பினர்கள் நியமிக்க முடியாது என்பதுதான் அந்த கட்சியின் விதி. இதை சுட்டிக்காட்டிதான் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் அதிமுக தரப்பு வாதிட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடரந்து சசிகலா தம்மை அதிமுகவின் பொதுச்செயலராக்க முயற்சித்தார். இதனால் அதிமுக பொதுக்குழு சசிகலாவை நியமன பொதுச்செயலராக நியமித்தது.
இரண்டாக உடைந்த அதிமுக
இதற்கு பின்னர் முதல்வர் பதவிக்கும் சசிகலா முட்டி மோதவே கட்சி இரண்டாக உடைந்தது. ஆனால் இதை பற்றியெல்லாம் கவலையே படாமல் தாம் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பினார் சசிகலா.
நியமனம் செய்ய முடியாது
இதற்கு செக் வைக்கும் வகையில் சசிகலா புஷ்பா மற்றும் ஓபிஎஸ் அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தன. அதாவது அதிமுக கட்சி விதிகளின்படி, பொதுச்செயலர் என்பவரை அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவால் நியமனம் செய்ய முடியாது என்பதை சுட்டிக்காட்டி இந்த புகார் கொடுக்கப்பட்டது.
பொதுச்செயலர் இல்லாத நிலையில்...
அதேபோல் பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் முந்தைய பொதுச்செயலரால் நியமிக்கப்பட்டவர்கள் புதிய பொதுச்செயலரை தேர்வு செய்யும் வரை அதிமுகவை வழிநடத்தலாம் என்பதும் இன்னொரு கட்சி விதி. பொதுச்செயலர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவைத் தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓபிஎஸ் உள்ளிட்டோர்தான் அதிமுகவை வழிநடத்த முடியும் என்பதை சுட்டிக் காட்டுகிறது இந்த விதிகள்.
நம்பிக்கையோடு
இதனால்தான் அதிமுக எப்படியும் தங்கள் கைகளுக்கு வந்துவிடும்; இரட்டை இலை சின்னம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறது ஓபிஎஸ் அதிமுக.