உள்ளாட்சித் தேர்தலில் 'ஆடாம ஜெயிச்சோமடா'!... வெற்றிக்கனி பறித்த அதிமுக; 3 இடங்களில் தோல்வி
சென்னை: உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரண்டு மேயர், நான்கு நகராட்சி தலைவர் பதவிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. அதோடு போட்டியிட்ட அனைத்து உள்ளாட்சி பிரதிநிதி பதவிகளையும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியை அதிமுகவினர் தமிழகம் முழுவதும் கொண்டாடிவருகின்றனர். சென்னையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில் அமைச்சர் கோகுல இந்திரா, ப.வளர்மதி உள்ளிட்டோர் தொண்டர்களுக்கு லட்டுகள் கொடுத்து கொண்டாடினர்.
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி, 8 நகராட்சி தலைவர் பதவி உள்பட காலியாக உள்ள உள்ளாட்சி பதவி இடங்களுக்கு செப்டம்பர் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தலை திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் புறக்கணித்தன.
அதிமுக, பாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலை சந்தித்தன. பாஜவுக்கு, தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. முதன் முதலாக தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவும், பாஜவும் நேருக்கு நேர் மோதின.
வெளியேறிய வெள்ளையம்மாள்
நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் கடைசி நேரத்தில் திடீரென வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
1589 பேர் போட்டியின்றி தேர்வு
இதனையடுத்து நெல்லையில் அதிமுக மேயர் வேட்பாளர் புவனேஸ்வரி போட்டியின்றி தேர்வானார். அதேபோல் புதுக்கோட்டை, கொடைக்கானல், குன்னூர் உள்பட 4 நகராட்சி தலைவர்கள், ஒரு பேரூராட்சி தலைவர், 4 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 30 நகராட்சி உறுப்பினர்கள், 64 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 1,589 அ.தி.மு.க. வேட்பாளர்கள் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
வாக்குப்பதிவு
தூத்துக்குடி, கோவை ஆகிய 2 மேயர்கள், 8 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் என 530 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
1486 பேர் போட்டி
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 25 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 99 பேர், ஊராட்சி தலைவர் பதவிக்கு 270 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 775 பேரும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தவரை மேயர்கள், மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு 317 பேர் என மொத்தம் 1,486 பேர் போட்டியிட்டனர்.
கள்ள ஓட்டு புகார்
வாக்குப்பதிவு நாளன்று பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாகவும், தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார் தெரிவித்தனர். உள்ளாட்சி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்ததாகவும், வேட்பாளர்களை அதிமுகவினர் தாக்கியதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. மேலும், சில பகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பதிவான வாக்குகள்
கோவை மேயர் தேர்தலில் கணபதிராஜ்குமார்(அதிமுக), நந்தகுமார்(பாஜ), பத்மநாபன்(மார்க்சிஸ்ட்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 16 பேர் போட்டியிட்டனர். தூத்துக்குடி மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸ், பாஜ வேட்பாளர் ஜெயலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் உட்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் ஊரக பகுதிகளில் 67.99 சதவீதமும் நகர்புற பகுதிகளில் 63.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை
எனினும் உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 307 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டன.
வெற்றிக் கொடி
தூத்துக்குடி, கோவை மேயர் பதவிகளை மீண்டும் அதிமுகவே கைப்பற்றியுள்ளது. 8 மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 நகராட்சி தலைவர்கள், 23 நகராட்சி வார்டு உறுப்பினர்கள், 6 பேரூராட்சி தலைவர்கள், 39 பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் என பல பதவிகளையும் அதிமுகவினரே கைப்பற்றினர். மூன்று இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வியை சந்தித்தனர்.
பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்
இந்த வெற்றியை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைப் போல அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அமைச்சர்கள் ரோடு ரோடாக சென்று லட்டுகள் கொடுத்தனர். அதேபோல தொண்டர்கள்,
ஆறுதல் வெற்றி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18வது கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் இதில் பாஜக வேட்பாளர் செந்தில்குமார் 232 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் திருமலை 213 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
வெற்றி பெற்ற செந்தில்குமார், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று, மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தத்துடன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பாஜகவினர் பட்டாசுகள் வெடித்தும், இணிப்புகள் வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடினர்.
சுயேட்சை வேட்பாளர் வெற்றி
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது. இந்த வார்டில் மொத்தம் ஆயிரத்து 490 ஓட்டுக்கள் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரத் என்பவர் ஆயிரத்து 24 ஓட்டுக்கள் பெற்றார். அ.தி.மு.க,. வேட்பாளர் அமலக்கனி வெறும் 466 ஓட்டுக்களேப் பெற்றார்.
கன்னியாகுமரியில் காங்கிரஸ்
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு பேரூராட்சி 4வது வார்டு உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜப்பன் 491வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், பாஜக வேட்பாளர் 194 வாக்குகளும,அதிமுக வேட்பாளர் 56 வாக்குகளையும் பெற்றனர். சி.பி.எம் வேட்பாளர் 13 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.