மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது.. அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கதறல்
மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து மத்திய அரசு எங்களை மிரட்டிப் பார்க்கிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மணல் குவாரி மற்றும் பொதுப்பணித்துறையில் ஒப்பந்தப்பணி தொழில் செய்து வந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி பல நூறு கோடி ரூபாய்களையும், 177 கிலோ தங்க நகைகளையும் அள்ளிச் சென்றனர்.
சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன் ராவ் மற்றும் தமிழக அமைச்சர்கள் பலரிடம் அவருக்கு மிகநெருக்கமானத் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, ராமமோகன் ராவ் வீட்டிலும், அவரது மகன் விவேக் இல்லம், அலுவலகம், சித்தூர், பெங்களூர் உட்பட 14 இடங்களில் புதன்கிழமையன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியதில் 40க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் 24 லட்சம் பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மத்திய அரசு நிர்பந்தம்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெற்றதற்கு பாஜகவே காரணம் என்றும், மத்திய அரசின் கொள்கைகளை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மறைமுகமாக பாஜக அரசு நிர்பந்தம் செய்கிறது என்று அதிமுக அமைச்சர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
பாஜக அரசு துரோகம்
இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியதாவது, இந்த வருமானவரித்துறையின் சோதனைக்குப் பின்னால் மிகப்பெரும் உள்நோக்கம் உள்ளது. தமிழக முதலமைச்சர் அம்மா புரட்சித்தலைவி இறந்த சில நாட்களிலேயே பாஜக அரசு துரோகம் செய்துள்ளது என்றார்.
முன்னாள் தலைமைச் செயலாளர் வீட்டிலும், அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியதில் உள்நோக்கம் இல்லை என்று உறுதியாகவும் கூற முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அதிமுகவிற்கு அழுத்தம்
அதிமுக செய்தி தொடர்பாளர் தீரன் கூறுகையில், இந்த செயல் பாஜகவின் திட்டமிட்ட சதியாகும். நாடாளுமன்றத்தில் அதிமுகவிற்கு 49 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவு தேவை என்பதற்காக பாஜக அரசு அதிமுகவிற்கு அழுத்தம் கொடுப்பதற்காக இந்த சோதனையை நடத்தி மறைமுகமாக எச்சரிக்கை விடுப்பதுபோல் உள்ளது .
எங்களை மிரட்டுவதா?
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டியத் திட்டங்களுக்கு அதிமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் நலனை கணக்கில் கொண்டும்தான் பாஜக அரசுக்கு முதல்வர் அம்மா எச்சரிக்கையாக ஆதரவு கொடுத்து வந்தார். தலைமைச் செயலாளர் மற்றும் பிற ஐஏஎஸ் அதிகாரிகளின் வீடுகளை வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது எங்களை மிரட்டுவதாக உள்ளது என்று தீரன் கூறினார்.