முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் சகோதரர் திமுகவில் இணைந்தார்
சென்னை: ராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமாரின் சகோதரர் சாந்தகுமார் தனது குடும்பத்தினருடன் திமுகவில் இணைந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த சாந்தகுமார், தனது குடும்பத்தினருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.
சாந்தகுமாருக்கு தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாந்த குமார், நாங்கள் பாரம்பரியமாக திமுகவைச் சேர்ந்தவர்கள். என் தந்தை திமுகவில் இணைந்து கவுன்சிலராக பணியாற்றியவர். அவர் விட்டுச் சென்ற பணியை நான் தொடருவேன் என்றார்.முன்னாள் சபாநாயகரும், இன்னாள் எம்.எல்.ஏவுமான ஜெயக்குமாரின் சகோதரர் சாந்த குமார் திடீரென திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் தவறாமல் இடம்பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர் ஜெயக்குமார். சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார், வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.
ராயபுரம் சட்டசபைத் தொகுதியிலிருந்து 1991, 2001, 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டவர். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மீன் வளம், பால் வளம் மற்றும் வனத் துறை அமைச்சராகவும், 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மின்சாரம், சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.
2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த உடன் சபாநாயகராக பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதற்குக் காரணம் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ஜெயக்குமாரின் 52வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவில் ‘அடுத்த முதல்வர்' என்று கோஷம் எழுந்ததாம். வெற்றிவேல் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற அந்த பிரம்மாண்ட விழாவில், சென்னையில் இருந்த ஆறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர்.வடசென்னை மாவட்டச் செயலர் வெற்றிவேல் உட்பட பல எம்.எல்.ஏ.,க்கள், ஜெயக்குமாருக்கு அதிகளவில் பொருட்களை பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவரம் அனைத்தும், உளவுத் துறையினரால் சேகரிக்கப்பட்டு, அதிமுக தலைமைக்கு தெரிவிக்கப்பட்டது.
இது அவரது சபாநாயகர் பதவிக்கு உலை வைத்தது. தவிர வடசென்னை தெற்கு மாவட்ட செயலராக இருந்த புரசை கிருஷ்ணன், மூர்த்தி, கவுன்சிலர் சரவணன் உள்ளிட்ட 12 பேர், கட்சியை விட்டே நீக்கப்பட்டனர். ஆனால் ஜெயக்குமாரின் பதவியை பறித்ததோடு விட்டு விட்டார் ஜெயலலிதா.
சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதாக் குறித்தோ, கட்சியின் செயல்பாடு குறித்தோ எந்தவொரு விமர்சனமும் செய்யாமல் அமைதி காத்து வந்தார் ஜெயக்குமார். இந்த நிலையில் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனின் திருமணத்தை கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமையேற்று நடத்தி வைத்தார் ஜெயலலிதா. சில மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தனுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா. ஜெயவர்த்தன் வெற்றி பெற்று இளம் எம்.பி என்ற பெயரினைப் பெற்றார். இது ஜெயக்குமாரின் விசுவாசத்திற்கு கிடைத்த பரிசு என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து ஜெயக்குமாரின் சகோதரர் சாந்த குமார் திடீரென திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.