அவசர ஆலோசனை கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் வாங்கிய சசிகலா?
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தடாலடி பேட்டியை தொடர்ந்து இன்று அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டத்திற்கு கட்சி பொதுச்செயலாளர் சசிகலா அழைப்புவிடுத்திருந்தார். காலை 11.40 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கி ஒரு மணி நேரம் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 11.40 மணிக்குதான் கூட்டம் தொடங்கியது.
அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் 134 அதிமுக எம்.எல்.ஏக்களும் பங்கேற்கவில்லை. சுமார் 110 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்ததைத் தொடர்ந்து, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து எம்.எல்.ஏக்கள் யாரும் பேசவில்லை.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், 110 எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டு சசிகலா வாங்கி வைத்துள்ளார். கையெழுத்து போட மறுத்தவர்களிடம் வற்புறுத்தப்பட்டு வாங்கப்பட்டுள்ளது. இன்னும் சில எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதம் பெறும் முயற்சி நடக்கிறது. பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட பிறகு ஆளுநரிடம் அதை காண்பித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.