சென்னையில் நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் கூடவுள்ளது.
சென்னை: சென்னையில் நாளை மறுநாள் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக இணைப்புக்கு பிறகு முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி அரசுக்கு பெரும்பான்மையை இழந்துவிட்டது.
எனவே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி எதிர்க்கட்சிகள் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த 19 பேரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்தாலும் அவர்கள் அதிமுகவினரே என்றும் மாற்றுக் கட்சிகளுக்கு தாவவில்லை என்றும் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தான் தலையிட முடியாது என்று ஆளுநர் கைவிரித்துவிட்டார்.
இதனால் எதிர்க்கட்சிகள் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதியை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இதில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொள்கின்றனர். தினகரன் தரப்பு எம்எல்ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப் 12-இல் அதிமுகவின் பொதுக் குழு கூடவுள்ளதாலும், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியதாலும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.