நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கட்டும்.. யாருக்கு ஆதரவு என்பதை அப்போது சொல்கிறோம்.. மூவர் அணி!
அதிமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர் சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சென்னை: அதிமுக கூட்டணி கட்சியைச் சேர்ந்த கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தனியரசு ஆகியோர் எந்த அணிக்கு ஆதரவு கொடுப்பது என்பதை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அதிமுகவுடன் முக்குலத்தோர் புலிகள் படை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன. எனினும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதன்பேரில் போட்டியிட்டு கருணாஸ், தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட போதும் எடப்பாடி அணிக்கே மூவரும் ஆதரவு அளித்தனர். இந்நிலையில் தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விட்டாலும், யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து மூவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
எம்எல்ஏ விடுதியில் மூவரும் தனியாக ஆலோசனையில் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் எம்எல்ஏ விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை பரோலில் விட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாஜகவின் சூழ்ச்சிகளுக்கு அதிமுக இரையாகாமல் தினகரனை அழைத்து சுமுகமாக பேசி அவர்களுக்கான முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் போது யாருக்கு ஆதரவு என்பதை முடிவு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications