சபாநாயகராகிறாரா ஓ.பன்னீர் செல்வம்?.. வாட்ஸ் ஆப்பில் ஆரம்பித்தது அலசல்!
சென்னை: சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. ஜெயலலிதா தலைமையில் வரும் 23ம் தேதி அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த நிலையில் அமைச்சரவையில் யார், யார் இடம் பெறுவார்கள் என்பது பற்றி ஒரு பட்டியல் வாட்ஸ் அப்பில் உலா வருகிறது.
கடந்த முறை அமைச்சராக இருந்த பல தலைகள் உருண்டு விட்டதால் இம்முறை அமைச்சரவையில் புதுமுகங்களை அதிகம் எதிர்பார்க்கலாம்.
ஓ.பன்னீர் செல்வத்திற்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்காமல் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்கின்றனர்
ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் வென்ற செங்கோட்டையனுக்கு இந்த முறை மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிறார்கள்.
ஜெயலலிதாவின் குட் புக்கில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, ஐவர் அணியில் ஒருவராக இடம்பிடித்துள்ளதால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைப்பது நிச்சயம் என்கிறார்கள்.
மதுரையில் சீனியரான ராஜன் செல்லப்பாவுக்கு அமைச்சராக வாய்ப்பு கிடைக்கலாம் என்கின்றனர். தற்போது இவர் மேயராக இருக்கிறார்.
கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த பழனியப்பனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பேச்சு அடிபடுகிறது.
ஐவர் அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மீண்டும் நெடுஞ்சாலைத்துறையே கிடைத்தாலும் கிடைக்கலாம்.
மயிலாப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றுள்ள முன்னாள் டி.ஜி.பி ஆர்.நட்ராஜ்க்கு சட்டத்துறை மற்றும் சிறைத்துறை வழங்கப்படலாமாம்.
ராயபுரம் தொகுதியில் 4வது முறையாக வென்றுள்ள ஜெயக்குமார் மீன்வளத்துறை மற்றும் சிறு துறைமுகத்துறை வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.
சட்டமன்றத்துக்கு புதிய முகமான திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு வாய்ப்பு கிடைக்குமாம்.
திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ நரசிம்மன். சீனியரான இவருக்கு அமைச்சர் பதவி வழங்கபடலாம் என்ற பேச்சு நிலவுகிறது.
மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்ற பெஞ்சமினுக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆவடியில் வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜனுக்கு தொழில்துறை அமைச்சர் பதவி தரப்படலாம் என்று பேச்சு நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் அடிபட்டதால் சீனியரான சீனிவாசனுக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
கம்பத்தில் வென்றுள்ள சீனியரான எஸ்.டி.கே. ஜக்கையனுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கின்றனர். அதே நேரத்தில் வேடசந்தூர் தொகுதியிலும் ஒக்கலிக கவுடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரது உறவினர் பரமசிவம் முதன் முறையாக எம்.எல்.ஏவாக தேர்வாகியுள்ளதால் இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கின்றனர்.
மருத்துவ பட்ட மேற்படிப்பு (எம்.எஸ்.) படித்த டாக்டர் கதிர்காமு, . தேர்தலில் நிற்பதற்காகவே வேலையை விட்டவர் புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு இவரது பெயர் அடிபடுகிறது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி வாகை சூடியுள்ள துரைக்கண்ணுவிற்கு அமைச்சராக வாய்ப்பு உள்ளதாம் காரணம் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்தவராம்.
வேதாரண்யம் தொகுதியில் வென்ற ஓ.எஸ்.மணியனுக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்கிறார்கள்.
முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முருகையா பாண்டியன் அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளதாம்
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்ற சண்முகநாதன் அமைச்சராவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாயுடு சமுதாயத்தை சேர்ந்த கோவில்பட்டி எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூவுக்கு அமைச்சராக வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.
ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வனையும் அமைச்சராக்குவார் என்கிற பேச்சு அடிபடுகிறது.
பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தோப்பு வெங்கடாசலம் பெயரும் அமைச்சரவை பட்டியலில் இருக்கிறதாம்.
திருப்போரூர் எம்.எல்.ஏ கோதண்டபாணிக்கு அமைச்சர் வாய்ப்பு அதிகம் என்கின்றனர்.
வருவாய்துறை அமைச்சாராக இருக்கும் உதயகுமார், மன்னார்குடி வகையாறாவின் ஆசியுடன் மீண்டும் அமைச்சராக ஆக வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம்.
நன்னிலம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றுள்ள அமைச்சர் ஆர்.காமரஜ் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாம்.
தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கமணி, கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் அவருடைய பெயரும் லிஸ்டில் இருக்கிறதாம்,
நீலகிரி மாவட்டத்துக்கும், படுகர் சமூகத்துக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் குன்னூர் தொகுதியில் வென்ற ராமுவுக்கு சுற்றுலாத்துறை கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான சுந்தர்ராஜனுக்க ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்படலாம் என்கிறார்கள்.
ஐந்து வருடங்கள் ஆடாமல் அசையாமல் அமைச்சராக இருந்தவர் எம்.சி.சம்பத். அதிக வாக்குகள் வாங்கி கடலூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார். இவருக்கும் அமைச்சர் யோகம் உண்டாம்.
செந்தில்பாலாஜிக்கு செக் வைக்கும் வகையில் கவுண்டர் சமூகத்தவர் என்கிற கோட்டாவில் ரெயின்போ' விஜயபாஸ்கர் அமைச்சராகலாம் என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளர் சமுதாயத்தில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் விஜயபாஸ்கருக்கு மீண்டும் அமைச்சராக வாய்ப்பு உள்ளதாம்.
இந்த பட்டியலில் மேலும் ஸ்ரீரங்கம் வளர்மதி, குன்னம் ஆர்.டி.ராமச்சந்திரன்,டாக்டர் மணிகண்டன், சிவகங்கை பாஸ்கரன், சிவகாசி கே.டி.ராஜேந்திரபாலாஜி, வேலூர் கே.சி.வீரமணி, வாணியம்பாடி அ.தி.மு.க எம்.எல்.ஏ நிலோபர் கபில், விஜயகாந்தை வீழ்த்திய குமரகுரு, விழுப்புரம் சி.வி.சண்முகம் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.
இப்படி வாட்ஸ் ஆப்பில் பேசிக்கிறாங்க.