பரோட்டா சூரி காமெடிபோல மீண்டும் முதலில் இருந்து கோடு போடும் அதிமுகவின் இரு அணிகள்
அதிமுகவின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையை பெறுவதற்காக அதிமுகவின் இரு அணிகளும் ஆவணங்களை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஆவணங்களை தயாரிக்கும் பணியில் இரு அணிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது. அது முதல் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணிகளும் போட்டியிட்டன.
வேட்புமனு தாக்கல்
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட இருந்த திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்டோர் வேட்புமனுக்களை ஒருவர் பின் ஒருவராக தாக்கல் செய்தனர். எனினும் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக வேட்புமனு தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
தேர்தல் ஆணையத்தில்...
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக இரு அணிகளும் அவரவர் தரப்பு நியாயங்கள் அடங்கிய மனுக்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து ஓ.பன்னீர் செல்வமும், தம்பிதுரையும் தாக்கல் செய்தனர்.
இரு தரப்பின் விளக்கம்..
இதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதிய கடந்த மார்ச் 23-ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரு அணிகளையும் சேர்ந்தவர்களை தேர்தல் ஆணையம் அழைத்தது. அப்போது ஓபிெஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும், சசிகலா தரப்பில் மூத்த பிரபல வழக்கறிஞர்களும் வாதாடினர்.
முடக்கியது
இறுதியில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாகவும் இரு அணிகளும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் ஆர்.கே.நகர் சசிகலா அணியின் வேட்பாளர் தினகரன் அதிமுக அம்மா கட்சி சார்பில் தொப்பி சின்னத்திலும், ஓபிஎஸ் அணி வேட்பாளர் மதுசூதனன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் இரட்டை மின் விளக்கு சின்னத்திலும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் ரத்து
இந்நிலையில் ,வேட்புமனு தாக்கல், பிரசாரம் என சூடுபிடித்த நிலையில் தினகரன் தரப்பு பணப்பட்டுவாடா செய்வதாலும், அமைச்சர் விஜயபாஸ்கர், தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாலும் அதன் அறிக்கையை வைத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
நிர்வாகிகளுடன் ஆலோசனை
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் ஆதரவை பெற இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். அதிமுக தங்கள் வசம்தான் உள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தில் நிரூபிக்க கட்சியினரின் உறுப்பினர் அடையாள அட்டையை நகல் எடுத்து, நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் எழுதி ஆவணங்களை தயார் செய்யும் பணியில் இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு கோடியாக அதிகரிக்க
ஓ.பி.எஸ். அணியினர் ஏற்கெனவே தங்களுக்கு 40 லட்சம் பேருக்கு மேல் ஆதரவு இருப்பதாக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்தனர். இந்த எண்ணிக்கையை 1 கோடியாக அதிகரிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு தொண்டர் பெயரிலும் உள்ள உறுப்பினர் அடையாள அட்டையை சேகரித்து ஆவணங்களை தயாரித்து வருகின்றனர்.
17-இல் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க...
இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தாங்கள் தயார் செய்யும் ஆவணங்களை வரும் 17-ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.