முன்னாடியெல்லாம் 'புரோக்கர்' இருப்பாங்க, இப்ப இல்லையே... குழப்பத்தில் அதிமுகவினர்!!
சென்னை: அதிமுகவினர் மிகவும் வித்தியாசமான ஒரு குழப்பத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்க யாரைப் பிடிப்பது என்பதுதான் அவர்களது பெரும் குழப்பம்.
இந்தக் குழப்பத்துக்குக் காரணம் முன்பு சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த யாரையாவது பிடித்தால் போதும், எப்படியாவது சீட் வாங்கி விடலாம்- செலவு ஜாஸ்தியானாலும் என்ற நிலை இருந்தது.
ஆனால் இப்போது சசிகலா குடும்பத்தினருக்கு கட்சித் தலைமையிடம் சுத்தமாக செல்வாக்கு போய் விட்டது என்பதால் சீட் வாங்க யாரைப் பிடிப்பது என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாம் அவர்களுக்கு.
40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கிய அதிமுக
நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உட்பட்ட 40 தொகுதிகளில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளது அதிமுக.
போட்டி போட்டு விருப்ப மனுக்கள்
டிசம்பர் 19 ம் தேதி முதல் டிசம்பர் 27 ம் தேதி வரை அதற்கான விண்ணப்ப படிவங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை பெறலாம் என்றும், இதற்கான கட்டண தொகையாக ரூ 25 ஆயிரம் என்றும் அதிமுக தலைமை அறிவித்து. அதன்படி விருப்ப மனுக்கள் தரப்பட்டுள்ளன.
அம்மாவுக்கு சீட் கேட்டு பலர் விருப்பம்
முதல்வர் ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விரும்பி பலர் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். மேலும் தங்களுக்கும் சீட் கேட்டும் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
சரி, சீட் எப்படிப் பெறுவது...
விருப்ப மனுக்களைக் கொடுத்த பலர் இப்போது சீட் வாங்குவது எப்படி என்ற கவலையில் மூழ்கியுள்ளனர். விருப்ப மனு கொடுத்ததுடன் நின்று விட்டால் நிச்சயம் சீட் கிடைக்காது என்று அவர்கள் பலமாக நம்புகிறார்கள்.
சிபாரிசுக்கு யாரைப் பிடிப்பது
எனவே தங்களுக்காக பலமாக சிபாரிசு செய்ய ஆள் பிடிக்க வேண்டும் என்ற நிலையில் உள்ளனர் இவர்கள். ஆனால் யாரைப் போய் சிபாரிசுக்காக பிடிப்பது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.
செல்வாக்கு இல்லாத சசிகலா குடும்பத்தினர்
முன்பு சசிகலா குடும்பத்தினர்தான் செல்வாக்காக இருந்தனர். இவர்களில் யாரையாவது ஒருவரைப் பிடித்து விட்டால் போதும், அவர்கள் மூலம் கட்சித் தலைமை வரை தங்களது பெயரைக் கொண்டு போய் அம்மாவின் அருட்பார்வையைப் பெற்று சீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
நம்பி கொடுக்கலாம்
மேலும் சசிகலா குடும்பத்தினரை நம்பி செலவு செய்யவும் கட்சிக்காரர்கள் தயாராகவும் இருந்தனர். இதனால் காரியம் சாதிப்பது சுலபமாக இருந்தது.
ஆனால் இப்ப யாருமே இல்லையே
ஆனால் இப்போது சசிகலா குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதா ஓரம் கட்டி ஒதுக்கி வைத்து விட்டார். சசி குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஜெயலலிதாவை அண்ட முடியாத நிலை. இதனால் சிபாரிசுக்காக யாரையும் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதிமுகவினருக்கு.
யாரை அணுகுவது என்பதில் குழப்பம்
எனவே இந்த முறை சீட் கேட்டும், தங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் யாரை போய் கேட்பது, யாரை அணுகுவது என்று தெரியாமல் விழிக்கின்றனராம் அதிமுகவினர்.
ஏற்கனவே வேட்பாளர்கள் ரெடி
அதேசமயம், முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே வேட்பாளர்களைத் தேர்வு செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியபடி உள்ளன. இதுவும் கூட சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளவர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியுள்ளதாம்..