அதிமுகவை உடைக்க ஓ.பி.எஸ். சதி.. முன்னாள் அமைச்சர் வளர்மதி பகீர் குற்றச்சாட்டு
திமுக பின்னணியின் காரணத்தினால் தான் பன்னீர்செல்வத்தின் சதிவேலை நடந்து வருகிறது என வளர்மதி கூறியுள்ளார்.
சென்னை: திமுகவின் பின்னணியில் இருந்து கொண்டு அ.தி.மு.கவை உடைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சதி செய்வதாக முன்னாள் அமைச்சர் வளர்மதி குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலா முதல்வராவதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்களும் இதை விரும்பவில்லை. சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர் செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்தார் சசிகலா. இதையடுத்து அதிமுக பிளவுபட்டுள்ளது.
தற்போது ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக அதிமுக உடைந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் ஓ.பி.எஸ். பக்கம் உள்ளனர். பொது மக்கள் மத்தியிலும், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மத்தியிலும் பன்னீர்செல்வத்துக்கு கணிசமான ஆதரவு உள்ளது.
இதனிடையே சசிகலா தரப்பும், ஓ. பன்னீர் செல்வம் தரப்பும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறுகையில், திமுகவின் வலையில் பன்னீர் செல்வம் விழுந்துவிட்டார் என அதிமுக தொண்டர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
திமுகவிடம் விலைபோனவர்கள் தான் பன்னீர் செல்வத்துடன் இருக்கிறார்கள். திமுகவின் பின்னணியின் காரணத்தினால் தான் பன்னீர்செல்வத்தின் சதிவேலை நடந்து வருகிறது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் முடிவு எடுப்பார்.
பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தான் அதிகாரமுள்ளது. அவரை நீக்குவோம் என்பது நகைச்சுவை. சட்டமன்ற உறுப்பினர்களை யாரையும் அடைத்து வைக்கவில்லை. அவர்கள் சுதந்திரமாக உள்ளனர். சசிகலா ஆட்சி அமைக்க தாமதம் ஏற்பட்டாலும் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.