சுடச்சுட நெய் ரோஸ்ட்... தொட்டுக் கொள்ள கெட்டி சட்னி... அமெரிக்காவிலும் ஏ2பி!
சென்னை: பிரபல உணவகங்களில் ஒன்றான அடையார் ஆனந்தபவன், அடுத்தமாதம் அமெரிக்காவில் தனது முதல் கிளையைத் தொடங்க உள்ளதாக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் 95 கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறது அடையார் ஆனந்தபவன் உணவகம். இதற்கு இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் கிளைகள் ஏதும் இல்லை.
சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய இனிப்புக் கடையாக திருப்பதி ராஜா என்பவரால் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது இந்தக் கடை. தற்போது பிரபல உணவகங்களில் ஒன்றாக வளர்ந்துள்ள இக்கடையை, அவரது இரண்டு மகன்கள் கவனித்து வருகின்றனர்.
|
முதல் வெளிநாட்டுக்கிளை...
இந்நிலையில், அடுத்தமாதம் தனது முதல் வெளிநாட்டுக் கிளையை அமெரிக்காவில் தொடங்க உள்ளது அடையார் ஆனந்தபவன். இதனை சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

மகிழ்ச்சி...
இந்தத் தகவலால் அங்குள்ள தமிழர்கள் மட்டும், இந்திய உணவுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனி, சுடச்சுட நெய் தோசை தமிழக மணத்துடன் அங்கும் கிடைக்கும் என்பதே அவர்களது மகிழ்ச்சிக்கு காரணம்.

சரவண பவன்...
ஏற்கனவே, அமெரிக்காவில் சரவண பவன் உணவகத்தின் மூன்று கிளைகள் இயங்கி வருகின்றன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இக்கடைக்கு 56 கிளைகள் உள்ளன.

எதிர்பார்ப்பு...
இந்நிலையில் அடையார் ஆனந்தபவனும் தனது வியாபாரத்தை அமெரிக்காவில் தொடங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடைக்கு கிடைக்கும் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்து மற்ற நாடுகளிலும் அதன் கிளைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications