21 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா வீட்டில் மீண்டும் சோதனை.. பீதியில் பதறும் சசி குடும்பம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.
சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் சோதனை நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆட்சிக்கட்டிலில் அமர முயன்ற சசிகலா குடும்பத்திற்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வந்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பூங்குன்றனின் அறையில்
இந்நிலையில் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். போயஸ்கார்டனில் உள்ள பூங்குன்றனின் அறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
21ஆண்டுகளுக்குப் பிறகு
ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ்கார்டன் வேதா இல்ல வீட்டில் சுமார் 21ஆண்டுகளுக்குப் பிறகு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 1996ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி ஜெயலலிதா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
5 நாட்கள் நடைபெற்ற சோதனை
அந்த சோதனை சுமார் 5 நாட்கள் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஏராளமாக கைப்பற்றப்பட்டது
அதில் பல முக்கிய ஆவணங்கள், நகைகள், நூற்றுக்கணக்கான செருப்பு ஜோடிகள் மற்றும் இன்னும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த தகவல் அப்போது வேகமாக பரவியதோடு மட்டும் அல்லாமல் பெரிதாக பேசப்பட்டது
சசிகலா அறையில் தீவிரம்
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் வேதா நிலைய வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சசிகலா தங்கியிருந்த அறையில் மட்டும் 10 அதிகாரிகள் சல்லடை போட்டு சளிக்காத குறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.