அஷ்டமி, நவமி முடிந்து வீடு திரும்புவார் கருணாநிதி
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி, அஷ்டமி, நவமி திதி முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒவ்வாமை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடந்த டிசம்பர் 1ஆம் தேதி அவருக்கு நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனையடுத்து 7ம் தேதி கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார்.
வீட்டில் ஓய்வில் இருந்த கருணாநிதிக்கு சுவாசப்பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு, மீண்டும் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு, மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அறிந்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி சிலசில நேரங்களில் மட்டும் கண்விழித்துப் பார்ப்பதும் பேச முயன்று அமைதியாவதுமாக இருக்கிறார். சில நேரங்களில் டிவியில் செய்தி பார்ப்பதாகவும் மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான், மருத்துவர்கள் குழு கருணாநிதிக்கு நினைவாற்றல், மூளையின் உத்தரவு சரியான நிலையில் உடலின் அனைத்துப்பகுதிகளுக்கும் தடையின்றி செல்கிறதா என்பதை அறிய சி.டி ஸ்கேனும் எடுத்துப் பார்த்தனர். சி.டி. ஸ்கேன் ரிசல்ட் நார்மல் என்று வந்துள்ளது. கருணாநிதியை தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க வைக்க காவேரி சிறப்பு மருத்துவர்கள் வெளிநாட்டு மருத்துவர்களோடு ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு, லம்பார் பஞ்சர் எனப்படும் முதுகு தண்டுவடத்தில் திரவத்தை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்களாம். இந்த நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமி, நவமி என்பதால் இரு தினங்களுக்குப் பின்பு கருணாநிதி டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது