தஞ்சை, அரவக்குறிச்சியைத் தொடர்ந்து ரத்தாகும் ஆர்கே நகர் தொகுதி தேர்தல்
வாக்காளர்களுக்கு பணம் லஞ்சமாக கொடுத்த காரணத்தால் தஞ்சாவூர், அரவக்குறிச்சியைப் போல ஆர்கே நகர் தொகுதி தேர்தலும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக வரலாற்றில் அண்மைகாலமாக தேர்தல்கள் பெரும் தலைகுனிவைத்தான் ஏற்படுத்தி வருகின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சியைத் தொடர்ந்து தற்போது பணப்பட்டுவாடா புகாரில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையும் தேர்தல் ஆணையம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் மே மாதம் நடைபெற்றது. அப்போது பெருமளவில் வாக்காளர்களுக்கு பணம் லஞ்சமாக கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது.
குறிப்பாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வாரியிறைக்கப்பட்டது. இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் முதலில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் இரு தொகுதி தேர்தல்களையும் ரத்து செய்வதாகவே தேர்தல் ஆணையம் அறிவித்து.

முதல் முறையாக..
தமிழக வரலாற்றில் பணப் பட்டுவாடா புகாரில் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டது என்பது அப்போதுதான் முதல் முறை. பின்னர் அந்த இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று அதிமுக வென்றது.

ஆர்கே நகர்
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடைத் தேர்தலிலும் பணப்பட்டுவாடா புகார்கள் பலமாக எதிரொலித்தன.

ரூ89 கோடி லஞ்சம்
இதன் உச்சகட்டமாக அதிமுக (அம்மா) அணி வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவு அமைச்சரான விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ89 கோடிக்கு வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் அடிப்படையில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லி விரைந்தனர்.

டெல்லியில் ஆலோசனை
டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியுடன் இருவரும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் ஆர்கே நகர் இடைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.

வெட்கக் கேடானது
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூரைத் தொடர்ந்து ஆர்கே நகரிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது பெரும் தலைகுனிவாகும். மக்களின் வாக்கு உரிமையை அரசியல் கட்சிகள் விலைபேசுவதும் மக்கள் தங்களது வாக்குகளை விற்பனை செய்வதும் ஜனநாயகத்துக்கு பெரும் கேடானதே!












Click it and Unblock the Notifications