பாஜக சூழ்ச்சிகளுக்கு அதிமுகவை பலி கொடுக்காமல் எடப்பாடி-தினகரன் இணைய வேண்டும்: மூவர் அணி தடாலடி
சென்னை: பாஜக அழுத்தத்திற்கு சூழ்ச்சிகளுக்கு அதிமுக பலியாகிவிடக்கூடாது என்று அதிமுகவின் தோழமை கட்சி எம்எல்ஏக்கள் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் கூட்டாக இன்று சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தமீமுன் அன்சாரி கூறுகையில், தமிழர்கள் நலன் விவகாரங்களில் ஒன்றுபட்டு போக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அரசியல் நிலவரம் பற்றி நாங்கள் இன்று விவாதித்தோம்.

பிளவுபடுத்த அதிமுக முயற்சி
தமிழக எதிர்காலம், சமூக நீதி காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பாஜக சூழ்ச்சியை ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் முடிவுக்கு வந்துள்ளோம். அதிமுகவை பிளவுபடுத்தி அழிக்க பாஜக முயல்வது தமிழகத்தின் சாமானிய குடிமகனுக்கும் தெரியும்.

முதலில் அதிமுக, பிறகு திமுக
தமிழக வளர்ச்சிக்கு திராவிட கட்சிகள்தான் காரணம். முதலில் அதிமுகவை அழிப்பார்கள், பிறகு திமுகவை அழிப்பார்கள். தமிழகமும், திராவிட கட்சிகளும் பாஜக சூழ்ச்சிக்கு இரையாகிவிட வேண்டாம். இதை மனதில் வைத்து, அதிமுக தலைவர்கள் ஈகோவை விட்டுவிட்டு இணைந்து பேச வேண்டும்.

வரலாற்று தேவை
அதிமுக பாதுகாக்கப்பட வேண்டியது தமிழகத்தின் வரலாற்று தேவை. அதிமுக தலைவர்களாக யார் இருக்க வேண்டும், முதல்வராக யார் வர வேண்டும் என்பதை அதிமுக ஆதரவாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கோபத்தில் உள்ளனர். அவர்களை அழைத்து முதல்வர் தரப்பு பேச வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு
பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்ததை போல தினகரன் தரப்புடனும் எடப்பாடி பழனிச்சாமி அணி இணைய வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை என மூவருமே தெரிவித்தனர். இவர்கள் மூவருமே தினகரன் தரப்புக்கு ஆதரவாக பேட்டியளித்ததை போல தெரிந்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு பிறகு பதில் சொல்வதாக கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications