தலித் என்பதால் புறக்கணிப்பு: அமைச்சருடன் மோதிய அதிமுக எம்.எல்.ஏவின் கட்சிப் பதவியை பறித்த ஜெ.
சென்னை: அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மோதிய ஆத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ மாதேஸ்வரை, சேலம் புறநகர் வட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருக்கும் எஸ்.மாதேஸ்வரன் எம்.எல்.ஏ., இன்று முதல் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்" என்று கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ புகார்
சேலம் மாவட்டம், ஆத்தூர்-கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் படிக்கும் பிளஸ்2 மாணவ- மாணவிகள் 1709 பேருக்கு லேப்டாப் வழங்கும் விழா ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.
அழைப்பிதழில் முரண்பாடு
இந்த விழாவில் ஆத்தூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாதேஸ்வரன் பேசும் போது இரண்டு அழைப்பிதழ்களை காட்டி பரபரப்பாக பேசினார்.
அப்போது, "இந்த அழைப்பிதழ்களில் எனது பெயர் வெவ்வேறு இடங்களில் முரண்பாடாக போடப்பட்டு உள்ளது. ஒரு அழைப்பிதழில் என்னை வரவேற்புரை அளிப்பார் என்றும், இன்னொரு அழைப்பிதழில் முன்னிலை வகிப்பார் என்றும் போட்டு இருக்கிறார்கள்.
தலித் என்பதால் புறக்கணிப்பு
கடந்த செப்டம்பர் மாதம் தாண்டவராயன்புரத்தில் எனக்கு தெரியாமலேயே அரசு விழா நடத்தப்பட்டது. இது பற்றி கலெக்டரிடம் கேட்ட போது அவர் விசாரணை நடத்துவதாக கூறினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ என்பதால் என்னை முற்றிலுமாக புறக்கணிக்கிறார்கள். இதை அமைச்சர் உரிய முறையில் விசாரிக்க வேண்டும்.
அரசு விழாவில்
2 லட்சம் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்த என்னை வேண்டுமென்றே அரசு விழாவில் புறக்கணிக்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் புறக்கணித்து கொள்ளட்டும். ஆனால் அரசு விழா என்றால் அதற்கு சில நெறிமுறைகள் உள்ளன. அதைக்கூட கடைபிடிக்காமல் என்னை புறக்கணிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். அமைச்சர் முன்னிலையில், எம்.எல்.ஏ மாதேஸ்வரன் மேற்கூறியவாறு குற்றம் சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வருக்குத்தான் மரியாதை
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, "அ.தி.மு.க.வில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான் மரியாதை. நாம் எல்லாம் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள். எனவே ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டுமே தவிர இது போன்று பள்ளி விழாக்களில் பேசிக்கொண்டு இருக்கக் கூடாது" என்றார்.
அதிரடி நீக்கம்
எம்.எல்.ஏ குற்றம் சாட்டி பேசியதும், அமைச்சர் அதற்கு பதிலளித்ததும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் மாதேஸ்வரன் எம்.எல்.ஏ கட்சி பொறுப்பில் இருந்து இன்று நீக்கப்பட்டு உள்ளார்.