அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையா கட்சியில் இருந்து டிஸ்மிஸ்: ஜெயலலிதா அதிரடி
சென்னை: அதிமுகவின் துறைமுகம் சட்டப் பேரவை உறுப்பினர் பழ.கருப்பையாவை கட்சியிலிருந்து நீக்கி அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெ.ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்களும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வட சென்னை தெற்கு மாவட்டச் சேர்ந்த பழ.கருப்பையா (துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிஸ்மிஸ் ஏன்?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட பழ.கருப்பையா, அமைச்சர்கள் கொள்ளையடிக்கிறார்கள்; கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசினார்.
இந்த பேச்சின் காரணமாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் இன்று கட்சியிலிருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.