காவிரி மேலாண்மை வாரியம் : மத்திய அரசைக்கண்டித்து ஏப்.3ல் அதிமுக உண்ணாவிரத போராட்டம் - ஓபிஎஸ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் என ஒபிஎஸ் அறிவித்துள்ளார்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 3ம் தேதி அதிமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும் என துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த கெடு மார்ச் 29ஆம் தேதியன்று முடிவடைந்து விட்டது. தமிழக மக்களின் முதுகில் மத்திய அரசு குத்தி விட்டதாக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று திருமண விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமை எந்த நேரத்திலும் பறிபோக விடமாட்டோம். அதற்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். அதற்கு அடையாளமாக ஏப்ரல் 3ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போகிறோம்.
இந்த போராட்டம் மாநில அளவில் மட்டுமல்ல இந்திய அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்தியில் உள்ளவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி இந்த போராட்டம் நடைபெறும். இது அறப்போராட்டம். சட்டம் ஒழுங்கிற்கு எந்த வித பங்கமும் ஏற்படாத வகையில் நடைபெறும். இந்த போராட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வோம் என்றார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் உணர்வு பூர்வமாக போராட்டம் நடைபெறும் என்று கூறினார். காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த போராட்டம் நடைபெறும். தமிழர்களின் ஒட்டு மொத்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடைபெறும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.