அஸ்வினி இருக்கிறாரா, இறந்துவிட்டாரா... போலீசாரிடம் அழகேசன் கேட்ட முதல் கேள்வி!
சென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் வைத்து மாணவி அஸ்வினியை துடிதுடிக்க கொன்றகொலையாளி அழகேசன் போலீசாரிடம் கேட்ட முதல் கேள்வி அஸ்வினி எப்படி இருக்கிறாள் என்பது தானாம்.
Recommended Video

சென்னை: சென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் வைத்து மாணவி அஸ்வினியை துடிதுடிக்க கொன்ற கொலையாளி அழகேசன் போலீசாரிடம் கேட்ட முதல் கேள்வி அஸ்வினி எப்படி இருக்கிறாள் என்பது தானாம். அஸ்வினி இறந்துவிட்டதாக போலீசார் கூறியதை கேட்டு அழகேசன் தேம்பி தேம்பி அழுததோடு தான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும் கூறியுள்ளாராம்.
சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தவர் அஸ்வினி. இவர் நேற்று பிற்பகல் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது அழகேசன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை கழுத்தை அறுத்து கொன்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினி அதே இடத்தில் உயிரிழந்தார்.
முதலில் ஒருதலைக் காதல் விவகாரத்தால் அழகேசன் அஸ்வினியை கொன்றார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில் பின்னர் இருவரும் சம்மதித்து காதலித்ததாகவும் அஸ்வினியின் திடீர் நிராகரிப்பை ஏற்க முடியாமல் அழகேசன் அஸ்வினியை கொன்றதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஸ்வினி உயிருடன் இருக்கிறாளா
அஸ்வினியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்த அழகேசனை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்ததால் அவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மருத்துவமனையில் போலீசார் அழகேசனின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சென்றுள்ளன. அப்போது போலீசாரிடம் அழகேசன் கேட்ட முதல் கேள்வியே அஸ்வினி எப்படி இருக்கிறார். அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்றும் கேட்டுள்ளார்.

அழகேசனின் வாக்குமூலம்
அதற்கு போலீசார் அஸ்வினி இறந்துவிட்டதாக கூறியதும், முகத்தை கைகளால் மறைத்து தேம்பி தேம்பி அழுதுள்ளார். பின்னர் போலீசாரின் கேள்விகளுக்கு அழகேசன் பதில் அளித்துள்ளார். அஸ்வினி, அழகேசன் இடையேயான உறவு குறித்து அழகேசன் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது : எங்கள் குடும்பம் மிகப்பெரியது, எனக்கு 3 அண்ணன்களும், 2 அக்காள்களும் உள்ளனர். நான் அதிகம் படிக்க வில்லை 10ம் வகுப்பு வரையே படித்துள்ளேன்.

காதலை சொன்ன அஸ்வினி
வாட்டர் கேன் போடுவது, மாநகராட்சியில் ஒப்பந்தப் பணி உள்ளிட்டவற்றை செய்து வந்தேன். அஸ்வினி தான் என்னிடம் முதலில் காதலை சொன்னார். நான் அப்போதே நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய் உனக்கு நான் பொருத்தமில்லாதவன் என்று கூறினேன். எனினும் தன்னுடைய குடும்ப வறுமையை காரணமாகச் சொன்ன அஸ்வினி, என்னை திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக வாழ விரும்புவதாகக் கூறினார்.

வேண்டியதை வாங்கிக் கொடுத்தேன்
அஸ்வினி மீது எனக்கு அதீத காதல் ஏற்பட்டது. அவள் பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் கல்லூரியில் படிக்க வைக்க என்னுடைய குடும்பத்தாருக்கே தெரியாமல் வீட்டை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் கடன் வாங்கினேன். அந்த பணத்தை வைத்து அஸ்வினியை கல்லூரியில் சேர்த்ததோடு அவர் விரும்பிவற்றையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.

எதிர்த்த அஸ்வினியின் தாய்
எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த போது எங்களின் காதலுக்கு அஸ்வினியின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில், எதுவும் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதற்காக அஸ்வினி வீட்டில் தனியாக இருந்த போது அவருடைய கழுத்தில் தாலி கட்டினேன். அஸ்வினியின் வீட்டில் உள்ள சாமி படத்தின் முன்பு வைத்து எங்கள் திருமணம் நடந்தது. ஆனால் இதை அஸ்வினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. சற்று அதிர்ச்சியடைந்தாலும், பின்னர் எதிர்க்கவில்லை.

தாலியை அறுத்தெறிந்தார்
எங்களிடையே பிரச்னை ஏற்பட அஸ்வினியின் தாய் தான் முழு காரணம். என்மீது போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்து அசிங்கப்படுத்தினார். என்னிடம் இருந்து அஸ்வினியை பிரித்தார். நான் கட்டிய தாலியையும் கழற்றி எறிந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது, அஸ்வினி இல்லாமல் வாழ முடியாது என்பதால் அவரை கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். அஸ்வினியை கத்தியால் குத்திவிட்டு என் மீது ஊற்றி இருந்த மண்எண்ணெயை பற்ற வைக்க லைட்டரை எடுத்து பற்ற வைக்க நினைத்த போது தான் பொதுமக்கள் என்னை பிடித்து அடித்தனர் என்று அழகேசன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications