அழகிரி பிறந்தநாளுக்கு வாழ்த்தும் ஒபாமா, டேவிட் கேமரூன்!!... தெறிக்க விடப்போகும் ஆதரவாளர்கள்!!!
மதுரை: சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவும், ஜனவரி மாதம் நடைபெறும் அழகிரி பிறந்தநாளும் மதுரை மாநகரில் பிரசித்தி பெற்றவை. சாரட் வண்டி ஊர்வலம், பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் என திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரையை தெறிக்க விட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு அழகிரியின் 65வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அழகிரியை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், சீன அதிபர் என வெளிநாட்டு தலைவர்கள் எல்லாம் வாழ்த்தும்! போஸ்டர்கள் மதுரையில் ஒட்டப்பட்டுள்ளன.
இதைப்பார்க்கும் மதுரைவாசிகள்தான் இது எப்பய்யா நடந்துச்சு என்று ஆச்சரியத்தில் வாயை பிளக்கின்றனர். எங்க கிரகம்... இதையும் பார்ப்போம் இதுக்கு மேலையும் பார்ப்போம் என்று கூறத் தொடங்கியுள்ளனர்.

அழகிரி பிறந்தநாள்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த 2001-ல் கட்சியில் இருந்து முதன் முதலில் தற்காலிகமாக நீக்கப்பட்டதிலிருந்தே மதுரையில் அவரது பிறந்தநாள் விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மதுரை சத்தியசாய் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரைக்கும் பேரணிபோல நடத்துவார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். அழகிரியின் பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாகவே பேனர்கள், போஸ்டர்கள், சுவர்களில் அழகிரியின் ஓவியங்களும் வரையப்பட்டு அசத்தல் வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

களைகட்டும் போஸ்டர்கள்
கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நெருங்கும் நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழலில் அவரது 65வது பிறந்த நாள் விழா வரும் 30ம் தேதி, வழக்கம் போல, படு விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கலகக்குரல் வாசகங்கள்
கடந்த 2014ம் ஆண்டு அழகிரியின் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் களைகட்டியபோது, சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க பொதுக்குழு நடக்கவிருந்தது. அப்போது 'மதுரையில் ஜனவரி - 30 பொதுக்குழு' என அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரால் கலகக்குரல் வெடித்தது. இந்த ஆண்டு அதுபோல எதுவும் வாசகங்கள் இடம்பெற வில்லை.

திமுகவினர் வரலையே
2014ம் ஆண்டு நடந்த விழாவில், தமிழகம் முழுவதும் இருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு எதிரானவர்கள் அழகிரிக்கு ஆதரவு தருவதாக திரண்டதால் கூட்டம் அலை மோதியது. கடந்த ஆண்டு அவ்வாறு யாரும் வரவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உட்கட்சி தேர்தல் அதிருப்தியாளர்களில் கூட, சொல்லிக்கொள்ளும்படியாக வரவில்லை.

கரைவேட்டிய கட்டிய அழகிரி
கடந்த 2014ம் ஆண்டு வாழ்த்த வந்த முன்னாள் எம்.பி.க்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டனர். கட்சி பொறுப்பில் இருந்தாலும்கூட, கடந்த 2015ம் ஆண்டு சிலர் துணிந்து விழாவில் பங்கேற்றார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கோபத்தில் திமுக கரைவேட்டி கட்டு வதையே தவிர்த்து வந்த அழகிரி, கடந்த ஆண்டு கரைவேட்டி கட்டியிருந்தார். கேக் வெட்டும்போதும்கூட கருப்பு, சிவப்பு நிற மாலையுடனே மனைவியுடன் காட்சியளித்தார்.
பரபரப்பாக ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் எதையும் சொல்லவில்லை.

ஸ்டாலினை கிண்டலடித்த அழகிரி
மீண்டும் திமுகவில் அழகிரியைச் சேர்ப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நேரத்தில் எதையாவது பேசி, அதைக் கெடுத்துவிட வேண்டாம்' என்று தலைமைக் கழகத்தில் உள்ள அவரது அனுதாபிகளும், குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டதாலேயே அழகிரி எதுவும் சொல்லவில்லை. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தை காமெடி டைம் என்று கிண்டலடித்தார்.

திமுகவில் இணைவாரா?
இந்த பிறந்தநாளில் எப்படியாவது அழகிரியை கோபாலபுரத்துக்கு வரவைத்துவிட முயற்சிகள் நடக்கின்றன. பொங்கல் தினத்தன்று அழகிரியைச் சென்று சந்தித்த அவரது ஆதரவாளர்கள், ‘நாங்கள் விரைவில் வேன் பிடித்து சென்னை போய் அறிவாலயத்தில் உட்காரப் போகிறோம் என்று கூறியுள்ளனராம். சட்டசபை தேர்தல் வருவதால் அழகிரியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெறிக்க விடுவோம்ல
எப்படியோ ' அழகிரி ஆதரவாளர்கள் 'தெறிக்க விடுவோம்ல' என்று ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளனர். பிறந்தநாளில் தலைமையை சமாதானப்படுத்தி திமுகவில் இணைந்து அதிமுகவினரை தெறிக்க விடுவாரா? அல்லது திமுகவிற்கு எதிராக கட்சிப்பணியாற்றி லோக்சபா தேர்தலைப் போல திமுகவினரை தெறிக்க விடுவாரா? என்பதை போகப் போகத் தெரியவரும்.












Click it and Unblock the Notifications