மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்.. டெப்போவுக்கே வந்து நடவடிக்கை மேற்கொண்ட ஆட்சியர்!
மதுரையில் போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Recommended Video
மதுரை: போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் காலையிலேயே பணிமனைகளுக்கே வந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை கொண்டு மிகக் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மதுரையில் அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்துகள் இயக்கப்படுகிறதா?
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள பணிமனை தலைமையிடத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். போராட்டத்தில் ஈடுபடாத ஊழியர்களால் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
16 பணிமனைகளுக்கு உத்தரவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்டம் முழுவதும் முடிந்த அளவிற்கு அதிக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். மதுரை மாவட்டத்தில் உள்ள 16 பணிமனையில் உள்ள பேருந்துகளை இயக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
10 சதவீத பேருந்துகள் இயக்கம்
கல்வி நிலையங்களுக்கு பள்ளி, கல்லூரி வகுப்புகள் முடிவடையும் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார். மேலும் மதுரையில் 9 மணி நிலவரப்படி 10 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அனைத்து பேருந்துகளும்
காவல்துறை உதவியுடன் சிறிது நேரத்தில் அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார். இதனிடையே பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து மதுரை பணிமனையில் போலீசாருடன், ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
இதையடுத்து தடியடி மூலம் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்தனர். இதைத்தொடர்ந்து மதுரை பணிமனைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.